கடந்த திங்களன்று, இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வாரியம் 1,76,051 கோடி ரூபாயை அரசுக்கு மாற்ற ஒப்புதல் அளித்தது, இதில் சர்ப்லஸ் அல்லது டிவிடெண்ட் 1,23,414 கோடி ரூபாயும், மற்றும் ஒரு முறை அதிகப்படியான ஒதுக்கீடு என்பதின் கீழ் ரூ .52,637 கோடியும் அடங்கும்.
ரிசர்வ் வங்கி வங்கிகளைப் ஒழுங்குபடுத்தும் பணிகளைச் செய்யும் ஒரு மைய வங்கி என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விசயங்களில் ஒன்றே. ஆகையால், சாதாரண கமர்சியல் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் போலன்றி ரிசர்வ் வங்கி டிவிடெண்ட் அறிவிக்கும் அமைப்பு அல்ல . பின், அதன் சர்ப்ளஸை எந்த தர்க்கத்தில் இந்திய அரசிடம் பரிமாற்றம் செய்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்
மத்திய வங்கியாய் இருக்கும் ரிசர்வ் வங்கி முதலில் எவ்வாறு லாபம் ஈட்டுகிறது?
ரிசர்வ் வங்கி பல சேவைகளை செய்யும் ஒரு முழுமையான மத்திய வங்கியாகும். இந்திய நாட்டின் பணவீக்கம் அல்லது பண மதிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், இந்திய அரசு மற்றும் மாநில அரசாங்கங்களின் கடன்களையும் நிர்வகிக்கிறது. மேலும், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்து அவைகளை ஒழுங்குபடுத்துவதும் செய்கிறது. நாட்டின் நாணயம் மற்றும் பண பரிவர்த்தன முறைகளை நிர்வகிக்கவும் செய்கிறது நமது ரிசர்வ் வங்கி .
இந்த செயல்பாடுகளையெல்லாம் செய்யும்போது, ரிசர்வ் வங்கி தனக்கான லாபத்தை ஈட்டுகிறது. இயல்பாக,எந்த மத்திய வங்கியாக இருந்தாலும் அதனிடம் உள்ள அந்நிய செலவானி கையிருப்பின் மூலம் தனக்கான வருவாயை ஈட்டுகின்றன. இந்த வருவாயை இந்திய ரிசர்வ் வங்கி பத்திரங்களாக மற்ற மத்திய வங்கிகளில் வைப்புத்தொகையாக வைத்திருக்கும்.
ரிசர்வ் வங்கி சந்தையில் விற்கப்படும் ரூபாய் மதிப்பிடப்பட்ட அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வதனால் வருவாய் அடைகிறது. மேலும், குறுகிய காலத்திற்கு வங்கிகளுக்கு தேவைப்படும் நிதியைக் கடன் கொடுக்கும் பொழுது ஓவர்நைட் சார்ஜ் செய்கிறது. இதையும் தாண்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் கடன்களை மேலாண்மை செய்வதால் அதற்க்கென்று தனியாக கட்டணங்களையும் வசூலிக்கின்றது.
ரிசர்வ் வங்கியின் செலவீனங்களை பொறுத்தவரையில் இந்திய நாணயத்தாள்களை அச்சிடுவது, தனது ஊழியர்களுக்கு செய்யும் செலவு போன்றவைகளே முதன்மையாக இருக்கின்றது. இதையும் தாண்டி, அரசாங்கத்தின் சார்பாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வங்கிகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகையும், இந்த பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளும் நமது ரிசர்வ் வங்கிக்கு செலவு கணக்கில் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிடெண்ட் அல்லது இலாபங்களை மாற்றுவது தொடர்பாக அரசாங்கத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான ஏற்பாட்டின் தன்மை என்ன?
இதில், முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், ரிசர்வ் வங்கி தனது லாபத்தில் இருந்து இந்திய அரசாங்கத்திற்கு டிவிடெண்ட் கொடுக்க வில்லை என்பதே ஆகும்.1935 ஆம் ஆண்டில் இதே ரிசர்வ் வங்கி ஒரு தனியார் பங்குதாரர்களின் வங்கியாக உருவாக்கம் செய்திருந்தாலும், 1949 ஜனவரியில் ரிசர்வ் வங்கியை தேசியமயமாக்கி, தனது இறையாண்மையின் கீழ் கொண்டுவந்தது இந்திய அரசு.
1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 47 (உபரி இலாபங்களை ஒதுக்கீடு) இன் படி, “சர்ப்லஸ் ” - என்ற வார்த்தைக்கு "செலவினம் போக மீதமுள்ள வருமானம்" என்று பொருள்கொள்ளப்பட்டு சர்ப்லஸ் தொகையை இந்திய அரசாங்கத்திற்கு மாற்றுகிறது.
பிரிவு 47 (உபரி இலாபங்களை ஒதுக்கீடு) சொல்லப் பட்டவைகள் பின் வருமாறு:
"மோசமான மற்றும் சந்தேகத்திற்கிடமான கடன்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தபின், சொத்துக்களின் தேய்மானம், ஊழியர்களுக்கான பங்களிப்பு மற்றும் மேலதிக நிதியம் <மற்றும் பிற எல்லா விஷயங்களுக்கும்> சரி செய்த பின் மீதமுள்ள , இலாபங்கள் மத்திய அரசுக்கு செலுத்தப்படும். ”
ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம் ஜூலை-ஜூன் கணக்கியல் ஆண்டு முடிந்ததும் ஆகஸ்ட் தொடக்கத்தில் பிரிவு 47-ல் சொல்லப்பட்டுள்ள இந்த சர்ப்லசை ஆண்டு தோறும் பரிமாற்றம் செய்யும்.
இந்த வருவாய் அல்லது இலாபங்களுக்கு ரிசர்வ் வங்கி வரி செலுத்துகிறதா?
இல்லை. ரிசர்வ் வங்கியின் சட்டம், 1934 இன் பிரிவு 48, ரிசர்வ் வங்கிக்கு வருமான வரி மற்றும் சொத்து வரி உட்பட வேறு எந்த வரியையும் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
சர்ப்ளஸ் விநியோகம் குறித்து வெளிப்படையான கொள்கை உள்ளதா?
தெளிவான வெளிப்படையான கொள்கை இல்லை என்றே சொல்லாம். ஆனால் ஒய்.எச்.மாலேகம் தலைமையிலான குழு 2013 ல் இருப்புக்களின் போதுமான அளவு மற்றும் உபரி விநியோகக் கொள்கையை மறுஆய்வு செய்த போது, அரசாங்கத்திற்கு அதிக பணபரிமாற்றம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
2013க்கு முன், ரிசர்வ் வங்கி தனது சர்ப்லஸின் ஒரு பகுதியை தற்செயல் நிதி யாக வைத்திருக்கும். இந்த நிதி மூலம்,எதிர்பாராத சூழ்நிலைகளை சந்திப்பதற்காகவும், உள் மூலதனச் செலவுகள் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் முதலீடுகளைச் சந்திப்பதற்காகவும் இயங்கி வந்தன. இந்த தற்செயல் நிதியை தனது மொத்த கணக்கு வழக்கில் பன்னிரண்டு சதவீதமாக ரிசர்வ் வங்கி நடைமுறைப் படுத்தி வந்தது குறிப்பிடத்தகது
ஆனால் மாலேகம் குழு பரிந்துரைக்குப் பின்னர், 2013-14 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி உபரி மொத்த வருமானத்தில் 99.99% வரை அரசாங்கத்திற்கு பரிமாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டன. 2012-13 ஆம் ஆண்டில் இந்த சர்ப்லஸ் மரிமாற்றம் வெறும் 53.40 சதவீதமாகத் தான் இருந்தன.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் வேறுபடுகின்றனவா?
ரிசர்வ் வங்கியின் இருப்புக்கள் அதன் தேவைகளை விட அதிகமாக உள்ளன என்ற கருத்தை இந்திய அரசாங்கம் நீண்ட காலமாக முன் வைக்கத்தான் செய்கின்றன. இந்த நிதியை அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்க பயன்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும் பரிந்துரைத்திருந்தார்.
ஆனால், மத்திய வங்கியோ.........நிதி அதிர்ச்சிகளிலிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை மனதில் வைத்தும், நிதி ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து சந்தைகளுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டியதன் அவசியத்தை உனர்ந்தும் அதன் இருப்புக்களை அரசாங்கத்திற்கு பகிராமல் கட்டமைக்கத் தான் விரும்பின. மேலும், அதன் பார்வையில், இருப்பு நிலையின் அளவைப் பொறுத்தே ஒரு மத்திய வங்கியின் சுயாட்சியைப் பேணிக்காக்க முடியும் என்று எண்ணி வந்தது.
எவ்வாறாயினும்,பண பரிமாற்றத்தின் அளவு மத்திய வங்கியின் அரசாங்கத்துடனான உறவை வரையறுப்பதில் ஒரு முக்கிய காரணியாக இருக்கவில்லை என்பது முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ் கருத்தாய் உள்ளது. இது பற்றி அவர் தெரிவிக்கையில் “இரு தரப்பினரும் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டி ஒரு தீர்வு எடுத்துள்ளனர்” என்று தெரிவித்து உள்ளார்.
உபரி பரிமாற்றத்தை மற்ற மத்திய வங்கிகள் எவ்வாறு நிர்வகிக்கின்றன?
இந்தியாவைப் போலவே, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள மத்திய வங்கிகள் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவு செய்கின்றன. ஆனால் ஜப்பானில், அரசாங்கமே தீர்மானிக்கிறது.
மிகவும், குறிப்போடு சொல்ல வேண்டும் என்றால், எந்த நாட்டிலும் இந்த பண பரிமாற்றம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதத்தை தாண்டாது என்றே சொல்லலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.