12 முதல் 15 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு அடுத்த வாரம் முதல் ஃபைசர்-பயோஎன்டெக்கின் கோவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அங்கீகாரம் அளித்துள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை பயன்படுத்த ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், தடுப்பூசியின் ஒரு டோஸ் இளையவர்களையும் கொடிய தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது என்று பயோஎண்டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளதால் இளையவர்களுக்கான பயன்பாடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணத்தை கனடா புதன்கிழமை அன்று பதிவு செய்தது. கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் இந்த மரணம் உறுதி செய்யப்பட்டது, அங்கு 50 வயதுடைய ஒரு பெண்ணுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி அளித்தவுடன் அவர் இறந்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த செய்தியாக, இந்த ஆண்டு இலையுதிர்காலத்திற்குள் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது கோவிட் -19 தடுப்பூசி டோஸை வழங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது, கிறிஸ்துமஸூக்குள் தொற்றுநோயால் ஏற்படும் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்து இந்த தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துகிறது, என்று டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகள் சமீபத்திய வாரங்களில் தங்கள் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கங்களை அதிகரித்து வருகின்றன.
உலகெங்கிலும் உள்ள கோவிட் -19 தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி இயக்கங்கள் பற்றிய தகவல்கள்
நாட்டின் சுதந்திர தினமான ஜூலை 4 ஆம் தேதிக்குள் 70% அமெரிக்க வயது வந்தோர்களுக்கு தடுப்பூசி; அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாட்டில் உள்ள 70 சதவீத வயது வந்தோர்க்கு, குறைந்தபட்சம் கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் ஜூலை 4ல் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் செலுத்தப்பட்டிருப்பதற்கான தடுப்பூசி போடும் திட்டத்தை செவ்வாய்க் கிழமை அன்று அறிவித்தார்.
"இப்போது எங்களுக்கு தடுப்பூசி வழங்கல் சீராக கிடைப்பதால், இன்னும் அதிகமான அமெரிக்கர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தடுப்பூசியை அவர்கள் பெற்றுகொள்வதற்கு நாங்கள் கவனம் செலுத்துகிறோம்" என்று பைடன் ஒரு வெள்ளை மாளிகையின் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை, நாட்டில் 247,769,049 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. சி.டி.சி பட்டியலில் இரண்டு டோஸ் செலுத்த வேண்டிய மாடர்னா மற்றும் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசிகளும், ஒரு டோஸ் மட்டும் செலுத்தக் கூடிய ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசியும் அடங்கும்.
கோவிட் தடுப்பூசிகளின் அடுத்த தலைமுறை நாசி ஸ்ப்ரேக்கள், மாத்திரைகள்
தற்போது அடுத்த தலைமுறை கோவிட் -19 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், தடுப்பூசிகள் எதிர்காலத்தில் ஊசி வடிவில் இருக்காது என்றும், அதற்கு பதிலாக மாத்திரைகள் அல்லது நாசி ஸ்ப்ரேக்களாக வழங்கப்படும் என்றும் கூறுகின்றனர். இதன் மூலம், தற்போது கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குப் பயன்படுத்தப்படும் திரவ வடிவ தடுப்பூசிகளை ஒப்பிடும்போது புதிய வடிவிலான தடுப்பு மருந்துகள் சேமித்து வைப்பதற்கு மிகவும் எளிமையானதாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த எதிர்கால தடுப்பூசிகளை அமெரிக்காவின் அரசு ஆய்வகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களான சனோஃபி எஸ்.ஏ, ஆல்டிமுன் இன்க் மற்றும் கிரிட்ஸ்டோன் ஆன்காலஜி இன்க் போன்றவற்றால் உருவாக்கி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் 93 தடுப்பூசி பரிசோதனைகளில், இரண்டு மட்டும் மாத்திரைகளாகவும் மற்றும் ஏழு மட்டும் நாசி ஸ்ப்ரேக்களாகவும் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
"நாசி மற்றும் வாய்வழி தடுப்பூசிகள் மூலம் நல்ல விஷயங்கள் வரும்" என்று WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கடந்த வாரம் ஒரு ஆன்லைன் குழுவில் கூறினார். மேலும் "அது தடுப்பூசி பயன்பாட்டை எளிதாக்கும்." என்றும் கூறியுள்ளார்.
தென் கொரிய ஆய்வில் கண்டுபிடிப்பு; அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஃபைசர் கோவிட் தடுப்பூசிகளின் ஒரு ஷாட்டில் 87% பலன்
அஸ்ட்ராசெனெகா மற்றும் ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசிகளின் ஒற்றை டோஸ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே தொற்றுநோய்களைத் தடுப்பதில் 86.6 சதவீதம் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது என்று தென் கொரியா வெளியிட்டுள்ள தகவல்கள் புதன்கிழமை தெரிவித்தன.
முதல் டோஸ் வழங்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஃபைசர் தடுப்பூசி நோயைத் தடுப்பதில் சுமார் 89.7 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவும் அதே நேரத்தில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி 86 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவும் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் (கே.டி.சி.ஏ) தெரிவித்துள்ளது, என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் கோவிட் தடுப்பூசி காப்புரிமைகள்
உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பினர்கள் புதன்கிழமை தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கோவிட் தடுப்பூசிகளை வளரும் நாடுகளுக்கு உதவும் நோக்கில் ஏற்றுமதி செய்வதற்காக, தடுப்பூசிகளின் காப்புரிமை தொடர்பான முன்மொழிவுகளை பற்றி ஆராய உள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
WTO இன் வர்த்தக தொடர்பான அறிவுசார் சொத்துக்களின் (TRIPS) ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளும் கடுமையான விதிகளை கேட்டுக் கொள்கின்றன. ஆனால், உலக வர்த்தக அமைப்பு தனது வர்த்தக விதிகளை மாற்ற, அனைத்து 164 உறுப்பினர்களின் ஒப்புதல் வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.