சென்னை மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ரயிலில் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டு, தற்போது அந்த நடைமுறையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2.5 மில்லியன் லிட்டர்கள் வீதம் 4 முறை ரயில் சேவை மூலம், சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
சென்னை மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி ஆகுமா?
சென்னையின் தினசரி தண்ணீர் தேவை 830 மில்லியன் லிட்டர்கள். சென்னை மெட்ரோ வாட்டர் கார்ப்பரேசன் மூலம் 525 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் ரயிலில் கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம், சென்னை மக்களின் 2 சதவீத தண்ணீர் தேவையே பூர்த்தியாகும்.
சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்படுவதனால், ஜோலார் பேட்டைக்கு தண்ணீர் பற்றாக்குறை வராதா?
வராது. மேட்டூர் அணையிலிருந்து பெறப்படும் தண்ணீர், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வேலூர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் உபரிநீர் தான் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஜோலார்பேட்டைக்கு எப்படி தண்ணீர் வருகிறது?
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் பிரமாண்ட பைப்லைன்கள் மூலம், ஜோலார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத சுரங்க தொட்டிக்கு வந்து சேர்கிறது. அங்கிருந்து 3.2 கி.மீ, தொலைவில் உள்ள ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் புறப்பட தயாராக உள்ள 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 வேகன்களில் நிரப்பப்பட்டு சென்னைக்கு புறப்படுகிறது.
இந்த தண்ணீர் நேரடியாக சென்னை மக்களுக்கு கிடைத்துவிடுகிறதா?
ஜோலார்பேட்டையிலிருந்து புறப்படும் ரயில், 205 கி.மீ தொலைவில் உள்ள சென்னை வில்லிவாக்கம் ரயில்வே யார்டுக்கு வந்து சேர்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள ராட்சத கண்டெய்னர்களில் அந்த தண்ணீர் நிரப்பப்படுகிறது. பின் அந்த தண்ணீர், செங்குன்றம் மற்றும் கீழ்ப்பாக்கம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சென்னையின் மத்திய மற்றும் வடசென்னை பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு ஆகிறது?
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஒருமுறைக்கு 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீதம் 4 முறை 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் கொண்டுவரப்படுகிறது. ஓருமுறைக்கு ரூ.8.6 லட்சம், ரயில்வே நிர்வாகத்திற்கு சென்னை மெட்ரோ வாட்டர் கார்ப்பரேசன் வழங்க உள்ளது.
இந்த தண்ணீர் பாதுகாப்பானதா?
ரயிலில் தண்ணீர் கொண்டு வரும் வேகன்கள், எண்ணெய் கொண்டு வருவதற்காக பயன்படுத்தப்பட்ட வேகன்கள் ஆகும். குஜராத் மாநிலத்திலிருந்து வந்துள்ள இந்த வேகன்கள், நீரானவி முறையில் தூய்மை உள்ளிட்ட பல்வேறு படிநிலைகளில் தூய்மைப்படுத்தப்பட்டே, தற்போது தண்ணீர் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, மக்கள் அச்சம் கொள்ளவேண்டாம்.
இந்த திட்டம் எத்தனை நாள்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது?
சென்னையில் பருவமழை விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த ரயில் தண்ணீர் திட்டம், அடுத்த 3 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.