அதிக காய்ச்சல், தமனிகளில் வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் இங்கிலாந்து நாட்டில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த, புது நோய் அறிகுறி கொரோனா வைரஸ் தொடர்பானதாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். திங்களன்று, குழந்தைகள் தீவிர சிகிச்சை அமைப்பு (PICS) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று வாரங்களாக 'தீவிர சிகிச்சை தேவைப்படும் பல அமைப்பு அழற்சி' எனும் நோய் அறிகுறி அனைத்து வயதிலான குழந்தைகளுக்கும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. அசோசியேட்டட் பிரஸ்ஸில் வெளியான ஒரு அறிக்கையில், இதுவரை 10-20 குழந்தைகள் இந்த நிலையை அடைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் குழந்தைகளிடம் சார்ஸ் -கோவ்-2 தொடர்பான அழற்சி நோய்க்குறி வளர்ந்து வருகிறது (அ) இதுவரை நாம் அடையாளம் காணாத ஒரு புது நோய்க்கிருமி இதற்கு காரணமாக இருக்கலாம்" என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) நாடு தழுவிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டால், விரைவில் தகவல் தெரிவிக்குமாறு மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள மருத்துவர்களும், குழந்தைகளிடம் இதுபோன்ற அறிகுறிகள் காணப்படுவதாக அதிகாரிகளை எச்சரித்துள்ளனர்.
பல அமைப்பு அழற்சி நோய் என்றால் என்ன?
இந்த அரிய வகையான நோய் அறிகுறி, இரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளில் திரவங்களை உற்பத்தி செய்வதன் மூலம் முழு உடலையும் பாதிக்கின்றது. இந்த அறிகுறிகள், 'கவாசாகி' எனும் ஒருவகை இதயநோய்க்கு சமமாகும். பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரல், இதயம் போன்ற பிற உறுப்புகளை சீரான முறையில் செயல்பட வைக்க தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.
அறிகுறிகள் என்ன?
வயிற்று மற்றும் இரைப்பை குடல் அழற்சியையும், இதயத்தசை வீக்கத்தையும் குழந்தைகள் வெளிபடுத்தியுள்ளனர். மேலும், இந்த புது நோய் அறிகுறி நச்சு அதிர்ச்சி நோய்க்குறி மற்றும் கவாசாகி நோய் அறிகுறிகளோடு தொடர்புபடுத்தலாம் என்று குழந்தைகள் தீவிர சிகிச்சை அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உடலில் நுழைந்த பாக்டீரியாக்கள் வெளியிடும் ஒருவகையான நச்சுத்தன்மையால் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி ஏற்படுகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்ட்டல், இந்த நோய் உயிரைக் கொள்ளும். அதிக உடல் வெப்பநிலை மற்றும் ஃப்ளு அறிகுறிகளான தலைவலி, தொண்டை புண், இருமல்,வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல்,சுவாசப் பிரச்னை, குழப்பம் போன்றவை இந்த நோயின் அறிகுறியாகும். சில நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு தேவைப்படலாம்.
கவாசாகி நோய் என்பது இரத்த நாளங்களில் ஏற்படும் ஒருவகையான அழற்சி நோயாகும். இது பொதுவாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படுகிறது. உடலின் பல பாகங்களை பாதித்தாலும், இதயத்திற்கு குறிப்பாக கடுமையான விளைவை ஏற்படுத்துகிறது. கரோனரி தமனி குழாயில் ஏற்படும் வீக்கத்தால், இதயத்திற்கு போகின்ற இரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்புக்கு வழிவகுக்கும். காய்ச்சல், வெளிப்புற மாற்றம், தடிப்பு, கருவிழிகள் சிவத்தல், சிவந்த மற்றும் விரிசலான உதடுகள், கழுத்தின் நிணநீர் விரிவாக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இந்த நோய் கோவிட் -19 உடன் தொடர்புடையதா?
புது நோய் அறிகுறிகளைக் காட்டும் சில குழந்தைகள் மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த நோய்க்குறி கொரோனா வைரஸுடன் எவ்வாறு தொடர்புடையது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கவலைக்கு காரணம் இருக்கிறதா?
திங்களன்று, சுகாதார சேவை எனும் மருத்துவ இதல் (எச்.எஸ்.ஜே) குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான தேசிய மருத்துவ இயக்குனர் கூறியதாக சிலவற்றை மேற்கோள் காட்டியிருந்தது .அதில் “கவாசாகி போன்ற நோய்கள் மிகவும் அரிதானவை. தற்போது குழந்தைகளில் காணப்படும் அறிகுறிகள், கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்றோடு தொடர்புடையவை. எனவே, இது பெரும் ஆறுதலாக உள்ளது. இருப்பினும், மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்" என்று கூறப்பட்டது.
இது "நோய்த்தொற்றுக்கு பிந்தைய அழற்சி நிலை" என்று சில மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது. நோயெதிர்ப்பு அமைப்பு அதிகப்படியாக செயல்படுவதினால் இந்த நிலை ஏற்படலாம். கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு ஏன் இந்த புது நோய் அறிகுறி தென்படுகிறது என்பதையும் இது விளக்கும். இந்த அழற்சி நிலை ஏற்படுவதற்கு முன்பு அவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றில் இருந்து குணமாகியிருக்கலாம் (அ) பரிசோதனையில் வைரஸைக் கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம்.
அதிகப்படியான தூண்டப்பட்ட நோயெதிர்ப்போடு தொடர்புடைய மற்றொரு நோய்க்குறி சைட்டோகைன் புயல் நோய்க்குறி ஆகும். சில கோவிட் -19 நோயாளிகள் (இளைஞர்கள் உட்பட), அதிகப்படியான நோயெதிர்ப்பை உருவாக்குவதன் மூலம் மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் நோய்க்கு தள்ளப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.