/indian-express-tamil/media/media_files/2025/10/15/tomato-pongal-2025-10-15-14-05-31.jpg)
பொங்கல் என்றாலே வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த முறை ஒரு வித்தியாசமான மற்றும் சுவையான 'தக்காளி பொங்கல்' செய்து பாருங்கள். இது காலையில் ஒரு முழுமையான உணவாக அமையும். தக்காளி மற்றும் மசாலாக்களின் சுவை நிறைந்த இந்த பொங்கல், ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். புளிப்பு, காரம் மற்றும் பொங்கலின் மென்மை என அனைத்தும் இதில் கச்சிதமாக இருக்கும். பொங்கல் பிரியர்கள் கட்டாயம் இதைத் தவறவிடாமல் முயற்சி செய்ய வேண்டும். இதனை எப்படி செய்வது என்று ஆர்.ஜே.காருண்யா இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மற்றும் பாசிப் பயறு - 1 கப்
நறுக்கிய தக்காளி - 2 பெரியது
நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 2-3
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சீரகம், கடுகு, வெந்தயம் - தலா 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் - தலா 1/2 முதல் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
எண்ணெய்/நெய் - 2 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர் - 4 முதல் 5 கப்
செய்முறை:
பச்சரிசி மற்றும் பாசிப் பயறை ஒன்றாகச் சேர்த்து நன்கு கழுவி, சுமார் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
நறுக்கிய தக்காளியுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி குழையும் வரை வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். ஊறவைத்த அரிசி மற்றும் பாசிப் பயறு கலவையை குக்கரில் சேர்க்கவும். 4 முதல் 5 கப் தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்து குக்கரை மூடவும். 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைத்து, பிரஷர் அடங்கியதும் திறந்து, நெய் சேர்த்து நன்கு கலந்து பரிமாறினால் சுவையான தக்காளி பொங்கல் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.