/indian-express-tamil/media/media_files/2025/10/30/beetroot-pachadi-2025-10-30-11-20-52.jpg)
புகைப்படம்: எக்ஸ்
பீட்ரூட் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். ஆனால் இதை பெரும்பாலான வீடுகளில் ஒரே மாதிரியான பொரியலாக மட்டுமே செய்து சாப்பிடுவது வழக்கம். ஒரு கட்டத்தில், இந்த வழக்கமான சுவை சலிப்பை ஏற்படுத்திவிடும். அந்த சலிப்பை நீக்கி, உங்கள் உணவிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு எளிமையான மற்றும் சுவையான ரெசிபி தான் இந்த பீட்ரூட் பச்சடி. இந்த பச்சடியின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது காய்கறியை வேக வைக்காமல், பச்சையாக பயன்படுத்தியே செய்யப்படுகிறது. இந்த முறை பச்சடிக்கு ஒரு புதிய சுவையையும், தனித்துவமான மணத்தையும் கொடுக்கிறது. சில நிமிடங்களில் தயார் செய்யக்கூடிய இந்த ரெசிபி, சாதம், சப்பாத்தி அல்லது பிரியாணி என எந்த உணவுடனும் பக்க உணவாக அருமையாகப் பொருந்தும். இதனை எப்படி செய்வது என்று திரியாம்பிகா இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட்
தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
தயிர்
உப்பு
தேங்காய் எண்ணெய்
கடுகு, உளுந்து பருப்பு
பெருங்காயத்தூள்
சின்ன வெங்காயம்/பெரிய வெங்காயம்
கருவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை:
முதலில், ஒரு நடுத்தர அளவு பீட்ரூட்டை எடுத்து, தோல் சீவி, சுத்தமாக கழுவிக்கொள்ளவும். இதனை மிகச்சிறிய ஓட்டைகள் உள்ள துருவலின் உதவியுடன் பொடியாக துருவி எடுத்துக்கொள்ளவும். இதை வேக வைக்க வேண்டியதில்லை, பச்சையாக இருக்கட்டும். தேங்காய், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும். துருவிய பீட்ரூட்டுடன், பொடித்து வைத்த தேங்காய் கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனுடன் கெட்டியான, புளிக்காத தயிரை (சுமார் இரண்டு கரண்டி அளவு) சேர்த்து நன்றாக கலந்து விடவும். (வீட்டில் உறை ஊற்றிய தயிரைப் பயன்படுத்தினால், தண்ணீரை வடித்துவிட்டு சேர்ப்பது நல்லது. பாக்கெட் தயிரை நேரடியாகச் சேர்க்கலாம்). ஒரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, உளுந்து பருப்பு சேர்த்து வெடித்ததும், பெருங்காயத்தூள், கருவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை (தேவைப்பட்டால் மட்டும்) சேர்த்து வதக்கவும். தாளித்த கலவை நன்றாக ஆறிய பிறகு, அதனை தயிர் கலந்த பீட்ரூட் பச்சடியில் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறவும்.
இந்த பச்சடியை காலையில் செய்துவிட்டு, மதிய உணவிற்கு எடுத்துச் செல்ல நேர்ந்தால், கிளம்புவதற்கு முன்பு டப்பாவில் அடைத்து எடுத்துச் செல்லவும் அல்லது தயிர் புளிக்காமல் இருக்க சற்று நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்தால், மத்தியானம் வரை புளிக்காமல் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us