/indian-express-tamil/media/media_files/2024/10/17/7qMnXQKkg63Enc0yfElg.jpg)
பாசிப்பருப்பை முக்கியப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இட்லி, சாதாரணமாக நாம் செய்யும் அரிசி இட்லியை விட அதிக சுவையுடனும், மென்மையாகவும் இருக்கும். இது பார்ப்பதற்கு ஸ்பான்ஜ் கேக் போல பஞ்சு போல் இருக்கும். மேலும், அரிசி சேர்க்கப்படாததால் ஆரோக்கியமான, உயர் புரத (High Protein) நிறைந்த இட்லியாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று வினிதா வலதீஸ்வரன் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு -1 கப்
உளுந்து -1 கப்
ஜவ்வரிசி -1 கைப்பிடி
உப்பு
செய்முறை:
முதலில், ஒரு கப் பாசிப்பருப்பு, ஒரு கப் உளுந்து மற்றும் ஒரு கைப்பிடி ஜவ்வரிசி ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்ளவும். அவற்றை 4 முதல் 5 முறை நன்றாகக் கழுவி, சுத்தமான தண்ணீரில் சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்கு ஊறிய பிறகு, இந்த கலவையை கிரைண்டரிலோ அல்லது மிக்ஸியிலோ சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு, நன்றாக நைஸாக அரைத்து எடுக்கவும். மாவு ஆரம்பத்தில் சற்று மஞ்சள் நிறத்தில் தோன்றினாலும், இட்லி அவித்த பிறகு நல்ல வெள்ளை நிறத்திற்கு மாறிவிடும். இந்த செய்முறையில் வேறு எந்த அரிசியும் சேர்க்கத் தேவையில்லை.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, உங்கள் கையால் நன்றாகக் கலக்கவும். கை சூட்டில் புளிப்பு விரைந்து மாவுக்குள் பரவும். பிறகு மாவை மூடி வைத்து, அடுத்த நாள் காலை வரை புளிக்க விடவும். மாவு நன்கு புளித்து, பஞ்சு போன்று பொங்கி வந்திருக்கும். புளித்த மாவை இட்லி தட்டுகளில் ஊற்றி, ஆவியில் வைத்து வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான், மிகவும் மென்மையான, சுவையான, உயர் புரதச்சத்து நிறைந்த பாசிப்பருப்பு இட்லி தயார். இந்த மாதிரி இட்லி செய்து கொடுங்கள் இனி யாரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். இதற்கு சட்னி, சாம்பார் குறிப்பாக தேங்காய் சட்னி நல்ல சுவையை கொடுக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.