/indian-express-tamil/media/media_files/2025/05/07/IpgHR3QhpR4iSLlLrmFz.jpg)
கொள்ளு ரசம் சளி, இருமல் மற்றும் மூக்கடைப்புக்கு ஒரு சிறந்த நிவாரணி. இதில் உள்ள மிளகு, சீரகம் மற்றும் பூண்டு போன்ற பொருட்கள் உடலுக்கு வெப்பத்தைக் கொடுத்து, சளித் தொல்லையை நீக்க உதவுகிறது. இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு -1/2 கப்
புளி
தக்காளி -1 (நறுக்கியது)
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
உப்பு
கொத்தமல்லி இலை
மிளகு- 1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
பூண்டு
எண்ணெய்
கடுகு -1/2 தேக்கரண்டி
பெருங்காயம்
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் -1
செய்முறை:
கொள்ளை நன்கு கழுவி, 2 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். கொள்ளை வேகவைத்த பிறகு கிடைக்கும் தண்ணீரை (கொள்ளு சாறு) தனியாக வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதுதான் ரசத்திற்கு முக்கியமானது. மீதமுள்ள வேகவைத்த கொள்ளை துவையல் அல்லது சுண்டல் செய்ய பயன்படுத்தலாம். புளியை சிறிதளவு வெந்நீரில் ஊற வைத்து, கெட்டியான புளிச்சாறை எடுத்து வைக்கவும்.
மிளகு, சீரகம், மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து (அ) உரலில் இடித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிச்சாறு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்த மிளகு-சீரகம்-பூண்டு கலவையை சேர்க்கவும். இப்போது கொள்ளு வேகவைத்த தண்ணீரில் (கொள்ளு சாறு) இருந்து 1 முதல் 1.5 கப் அளவு எடுத்து இந்த கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, புளியின் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
சின்ன வாணலியில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு சேர்த்து வெடித்தவுடன், காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்தத் தாளிப்பை கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். ரசம் நன்கு நுரைக்க ஆரம்பித்தவுடன் (கொதிக்க விடக்கூடாது), அடுப்பை அணைத்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி, உடனடியாக சூடாக பரிமாறவும். இந்த சூடான கொள்ளு ரசத்தை சாதத்தில் பிசைந்தோ அல்லது சூப் போல குடித்தோ வந்தால் மூக்கடைப்பு நீங்கி, உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.