/indian-express-tamil/media/media_files/2024/12/20/EdPSrVbwDcMvECn1KY1O.png)
இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளுக்கு சைட் டிஷ்ஷாக சாம்பார் இல்லாத உணவே இல்லை எனலாம். ஆனால், சாம்பார் செய்ய பெரும்பாலும் துவரம் பருப்பை வேகவைக்க அதிக நேரம் எடுக்கும். அந்த சிரமத்தை குறைக்கும் விதமாக, துவரம் பருப்பு சேர்க்காமல், கடலை மாவை பயன்படுத்தி மிக விரைவாகவும் அதே பாரம்பரிய சுவையுடனும் இந்த உடனடி சாம்பாரை தயாரிக்க முடியும். இதன் கெட்டித்தன்மைக்கு கடலை மாவு மற்றும் வேகவைத்த வெங்காயம், தக்காளியின் சாரம் இருப்பதால், சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று ஆர்.கே. ரெசிப்பீஸ் பவுல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் 4
தக்காளி 4
பச்சை மிளகாய் 5
சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு
கட்டி பெருங்காயம்
கடலை மாவு 3 டீஸ்பூன்
பெருங்காய பொடி 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
சீரகம்
காய்ந்த மிளகாய் 2
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை:
வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை வெட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இவற்றை தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், சாம்பார் பொடி, கட்டிப் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். காய்கறிகள் குழையும் வரை வேகட்டும். சாம்பாருக்கு கெட்டித்தன்மை கொடுக்க, ஒரு கிண்ணத்தில் 3 டீஸ்பூன் கடலை மாவை (அல்லது பொட்டுக் கடலை மாவை) சிறிது தண்ணீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும்.
வெந்த காய்கறிகள் கலவையை லேசாக மசித்துக் கொள்ளவும். பிறகு, கரைத்து வைத்திருக்கும் கடலை மாவுக் கரைசலை அதில் ஊற்றி, பெருங்காய பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும். இது ஒரு கொதி வந்தவுடன், சாம்பார் கெட்டியாக ஆரம்பிக்கும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து சாம்பாரில் ஊற்றவும். இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி, மணமணக்கும் பருப்பு இல்லாத உடனடி சாம்பாரை சூடாக பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.