/indian-express-tamil/media/media_files/2024/11/18/Rd4ZCd0817hNPVHUkkUy.jpg)
சப்பாத்தி செய்வது என்றாலே, மாவு பிசைவது, ஊற வைப்பது, பின்னர் தேய்த்து எடுப்பது என்று அதிக நேரம் எடுக்கும் வேலையாக இருக்கும். ஆனால், மாவை கைகளால் பிசைய வேண்டிய அவசியமே இல்லாமல், மிக்ஸி மற்றும் சில எளிய சமையலறை உபகரணங்களைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த நேரத்தில் மிருதுவான சப்பாத்திகளைத் தயாரிக்க முடியும். இது சமையல் வேலைப்பளுவைக் குறைக்கும் ஒரு அருமையான மற்றும் விரைவான முறையாகும். இதனை எப்படி செய்வது என்று கோமுஸ் லைஃப்ஸ்டைல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
தண்ணீர் – 1/2 கப் (அதே கப்பில் அளக்கவும்)
உப்பு
எண்ணெய்
செய்முறை:
முதலில், ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு கப் கோதுமை மாவு மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். பிறகு, அரை கப் தண்ணீரை ஊற்றி, மிக்ஸியில் போட்டு பிசைந்து எடுக்கவும். இது மாவை கையால் பிசைந்து தயார் செய்வதற்குப் பதிலாக மிக்ஸி மூலமாக தயார் செய்யும் எளிய வழியாகும்.
மிக்ஸியில் தயார் செய்த மாவு கலவையிலிருந்து, சிறிய அளவிலான சப்பாத்தி உருண்டைகளைப் பிடித்து தனியாக வைக்கவும். சப்பாத்தி தேய்க்க, பிளாஸ்டிக் கவர் அல்லது கோதுமை மாவு வந்த கவரை எடுத்து இரண்டாக வெட்டி, சுத்தமாகத் துடைத்துக்கொள்ளவும். பிடித்து வைத்த மாவு உருண்டையை கவரின் நடுவில் வைத்து, அதன் மீது மறுபாதி கவரை வைத்து மூடிவிடவும்.
இப்போது, மாவு உருண்டையின் மீது ஒரு தட்டு அல்லது சிறிய மூடியை வைத்து, நன்கு அழுத்தி தேய்த்து எடுத்தால் வட்ட வடிவ சப்பாத்தி தயாராகிவிடும். தேவைப்பட்டால், சப்பாத்தி தேய்க்கும் கட்டை (ரோலிங் பின்) பயன்படுத்தி வட்டமாக தேய்த்தும் கொள்ளலாம். இறுதியாக, தோசைக்கல்லை சூடாக்கி, அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியைப் போட்டு, இரண்டு பக்கமும் எண்ணெய் அல்லது நெய் விட்டு திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். மாவு பிசையாமல் செய்யப்பட்ட மிருதுவான சப்பாத்தி சுடுவதற்குத் தயாராகிவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.