குக்கரில் வெண் பொங்கல் ஈஸியாக எப்படி செய்வது என்பது இங்கே..
பொதுவாக குக்கரில் பொங்கல் வைத்தால் அது ஆறியதும் கல் மாதிரி இறுகிவிடும். ஆனால் இந்த முறையில் செய்தால் பொங்கல் ஆறினாலும் ருசியாக, மிருதுவாக இருக்கும்.
வெண்பொங்கல் செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் அரை கப் பாசி பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பொங்கல் பச்சரிசி அல்லது பொன்னி பச்சரிசி எடுத்து, அதில் வறுத்த பாசி பருப்பை சேர்க்கவும். இதை 2,3 முறை நன்கு அலசிய பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு சிறிய கட்டி பெருங்காயத்தை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து கரைக்கவும்.
இப்போது அடுப்பில் ஒரு பெரிய குக்கர் வைத்து அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து 4 ½ கப் தண்ணீர் சேர்க்கவும். நீங்கள் சேர்க்கும் அரிசி, பருப்புக்கு ஏற்றவாறு 3 மடங்கு தண்ணீரி சேர்க்க வேண்டும், பழைய அரிசி என்றால் கூடுதலாக இன்னும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். இப்போது குக்கரை மூடிவிட்டு மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் , 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் நெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு சேர்க்கவும். இது பொரிந்ததும் 10 முந்திரி பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும். இப்போது அடுப்பை அணைத்து விட்டு ஒரு துண்டு துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துவிட்டு, ஏற்கெனவே ஊறவைத்த பெருங்காயத் தண்ணீரை சேர்க்கவும்.
இப்போது குக்கரை திறந்து பொங்கலுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, இந்த தாளிப்பையும் சேர்த்துவிட்டு கரண்டியால் நன்கு கிளறிவிடவும்.
அவ்வளவுதான் சுவையான வெண்பொங்கல் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.