/indian-express-tamil/media/media_files/2025/09/30/soya-chunks-2025-09-30-12-53-43.jpg)
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவைத் தவிர்க்கும் அசைவப் பிரியர்களுக்காகவே இந்தச் சிறப்பு ரெசிபி. சோயா சங்ஸை (மீல் மேக்கர்) பயன்படுத்தி செய்யப்படும் இந்த வறுவல், பார்ப்பதற்கும் சாப்பிடுவதற்கும் அப்படியே கறி வறுவல் போலவே இருக்கும். இதைச் சுவைக்கும் யாராலும் இது சைவம் என்று எளிதில் கண்டுபிடிக்க முடியாது. மிக எளிமையான முறையில், குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய இந்த சுவைமிகுந்த ரெசிபியை அபி சமையல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது போல நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
சோயா
நல்லெண்ணெய்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய் 2
வரமிளகாய் 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் ½ டீஸ்பூன்
தக்காளி 1
மஞ்சள் தூள்
உப்பு
கறிவேப்பிலை
கரம் மசாலா ¼ டீஸ்பூன்
மல்லி இலை
மல்லி (தனியா): 2 டீஸ்பூன்
மிளகு: 1 டீஸ்பூன்
சோம்பு: ½ டீஸ்பூன்
சீரகம்: ½ டீஸ்பூன்
வரமிளகாய்: 1
பொட்டுக்கடலை: 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, மல்லி, மிளகு, சோம்பு, சீரகம் மற்றும் ஒரு வரமிளகாய் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வாசம் வரும் வரை நன்கு வறுக்கவும். பிறகு அதனுடன் இரண்டு டீஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து, அனைத்தும் ஆறியதும் பொடியாக அரைத்து எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், இரண்டு விதை இல்லாத வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பிறகு பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து நன்கு வதக்கிவிடவும். இப்போது மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை முழுவதுமாக போகும் வரை வதக்கவும்.
இதனுடன் சுடுதண்ணியில் ஊற வைத்துப் பிழிந்த சோயாவையும், நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். இந்த கலவையை சுமார் 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு, இடையில் அப்பப்பம் திறந்து கலந்து விடவும். இறுதியாக, கால் டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.