/indian-express-tamil/media/media_files/2025/05/30/bae5hy8wZLALn7dlUtJa.jpg)
எல்லா வகை உணவுகளுக்கும் ருசியைக் கூட்டக் கூடியது ஊறுகாய். அப்படிப்பட்ட ஊறுகாயை நாம் பக்குவமாகச் செய்தால், பல மாதங்கள் வரை கெடாமல் வைத்திருந்து சாப்பிடலாம். அந்த வகையில் பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பூண்டு - 1 கிலோ
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வரமிளகாய் - 25
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கல்லுப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சம் பழ சாறு - அரை மூடி
செய்முறை:
ஊறுகாய் செய்வதற்காக ஒரு கிலோ வெள்ளை பூண்டை எடுத்துக் கொள்ளவும். எடுத்துக்கொண்ட ஒரு கிலோ பூண்டை உரித்து கழுவி சுத்தமாக எடுத்துக்கொள்ளவும்.
ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடுகு இரண்டையும் இப்போது நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து, 25 வரமிளகாயையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது, கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, பூண்டை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பூண்டு வதங்குவதற்காக சிறிது கல்லுப்பு சேர்த்து நன்றாக வதக்கினால், பூண்டு இந்த அளவுக்கு வதங்கினாலே போதுமானது. இப்போது, வறுத்து வைத்திருந்த வரமிளகாயை உரலில் போட்டு அரைக்க ஆரம்பிக்கலாம்.
வரமிளகாயை ஓரளவு அரைத்தபின்பு, வறுத்து வைத்திருந்த வெந்தயம் மற்றும் கடுகை சேர்த்து நன்றாக அரைக்க ஆரம்பிக்கலாம். வதக்கிய பூண்டில், மூன்றில் இரண்டு பங்கு பூண்டை இப்போது தனியாக எடுத்து வைத்து, மீதமுள்ள ஒரு பங்கு பூண்டை உரலில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து, ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, சிறிது கடுகு சேர்த்துக்கொள்ளவும். அரைத் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். அடுத்து சிறிது கருவேப்பிலையையும் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது, அரைத்து வைத்திருந்த பூண்டை சேர்த்து நன்றாக கிளற ஆரம்பிக்கலாம்.
அடுத்து, அரைக்காமல் தனியாக எடுத்து வைத்திருந்த பூண்டை இதனுடன் சேர்க்கவும். இப்போது, சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக்கொள்ளலாம். இப்போது, அரை எலுமிச்சம் பழ சாறை சேர்த்துக்கொள்ளலாம். உப்பை சரி பார்த்துவிட்டு, தேவையான அளவு சிறிது உப்பை சேர்த்துக்கொள்ளலாம்.
ண்டு நன்றாக வதங்கி, எண்ணெய் தனியாகப் பிரிந்து வர ஆரம்பித்தால், பூண்டு ஊறுகாய் தயாராகிவிட்டது. பூண்டு ஊறுகாய் நன்றாக ஆறிய பிறகு, இந்த பூண்டு ஊறுகாயை கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இந்த பூண்டு ஊறுகாயில் கை மட்டும் படாமல் பார்த்துக் கொண்டால், பல மாதங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us