கடந்த 2015-ஆம் ஆண்டு கோவை-ஜெய்ப்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷ் கார்க் எனும் வழக்கறிஞர் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கோட்டா எனும் பகுதிக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 139 என்ற ரயில்வே வாடிக்கையாளர் மையத்துக்கு தொடர்பு கொண்டு பேசிய க்ரிஷ், 'கோட்டா ரயில் நிலையம் வந்தவுடன் என்னை அலர்ட் செய்து எழுப்பிவிடுங்கள்' என்று கூறியிருக்கிறார்.
இதற்கு 139 சேவை மையமும் ஒப்புதல் தெரிவித்திருந்தது. ஆனால், கோட்டா ரயில் நிலையம் வந்தவுடன், 139 சேவை மையம் அவரை அலர்ட் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தானாகவே சுதாரித்துக் கொண்ட க்ரிஷ், கடைசி நேரத்தில் கோட்டா ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டார்.
இந்நிலையில், "என்னை சரியான நேரத்திற்கு எழுப்பாமல் போனதால், நான் மிகுந்த மனவேதனை அடைந்துவிட்டேன். இதனால், ரயில்வே நிர்வாகம் எனக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க வேண்டும்" என்று நீதிமன்றத்தில் க்ரிஷ் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து, க்ரிஷின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, "மனவேதனை அடைந்த க்ரிஷ் கார்க்கிற்கு ரூ.5000 இழப்பீட்டை ரயில்வே வழங்க வேண்டும் என்றும், அதனை இந்த மாதத்திற்குள்ளாகவே வழங்க வேண்டும்" என்று கூறி உத்தரவிட்டுள்ளது.
அதோடுமட்டுமில்லாமல், இந்த வழக்கு செலவுகளுக்காக, க்ரிஷ்க்கு 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், ரயில்வே நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.