அயோத்தியில் அமைந்திருந்த வரலாற்று சிறப்புவாய்ந்த பாபர் மசூதி, 1992–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி கரசேவை நடத்தி தகர்க்கப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஒரு வழக்கு, பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீதும், மற்றொரு வழக்கு பாபர் மசூதி இடிப்புக்கான சதியில் ஈடுபட்டதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டன. இதில் முதல் வழக்கு விசாரணை லக்னோ தனி நீதிமன்றத்திலும், 2–வது வழக்கில் ரேபரேலி நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச்சதி வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்ட 21 பேரை ரேபரேலி நீதிமன்றம், கடந்த 2001–ம் ஆண்டு விடுவித்தது.
இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010–ம் ஆண்டு உறுதிசெய்தது. ஆனால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், லக்னோ, ரேபரேலி ஆகிய இரு சிபிஐ சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த வழக்கை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதன்படி லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் படி லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஆஜராகினர்.
அதன்பின், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, இவர்கள் மூன்று பேர் உட்பட ஆறு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், இவ்வழக்கில் தங்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதில் விலக்கு அளிக்கக்கோரி அத்வானி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகின்றன.