கடந்த ஞாயிறன்று பாக்தோக்ரா விமான நிலையத்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு AI-880 எனும் ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. இதில் 168 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் கிளம்பும் முன்பு, ஏசி வேலை செய்யாமல் இருந்திருக்கின்றது. அதற்கு பதிலளித்த பணிப்பெண்கள், "விமானம் கிளம்பியவுடன் ஏசி வேலை செய்யும் என்று கூறியிருக்கின்றனர்.
ஆனால், விமானம் கிளம்பிய பின்னரும் ஏசி வேலை செய்யவில்லை. இதனால், பயணிகள் அனைவரும் காகிதங்களையும், பத்திரிக்கைகளையும் விசிறிகளாக பயன்படுத்தி இருக்கின்றனர். தொடர்ந்து காற்றோட்டம் குறைவாக இருந்ததால், சிலர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் மாஸ்க்கை எடுத்து பொருத்திய போது, அதுவும் வேலை செய்யாமல் இருந்திருக்கிறது. ஒருவழியாக, டெல்லி வந்தடைந்ததும், பயணிகள் தலை தெறிக்க ஓடியிருக்கின்றனர். அதோடு மட்டுமின்றி, சமூக தளங்களில் அவர்களது அருமையான பயணம் குறித்த வீடியோ மற்றும் படங்களை பதிவு செய்து ஏர் இந்தியா நிறுவனத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.
சிலர், ஏர் இந்தியாவை தனியாருக்கு அளிக்கும் முடிவில் தவறேயில்லை என்று காட்டமாக பதிவிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோதான் ட்விட்டரில் ட்ரெண்டிங் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.