ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி குளிர்கால கூட்டத்தொடரை தொடங்குவதில் கால தாமதம் செய்து வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடர் மொத்தம் 14 நாட்கள் நடைபெறுகிறது. இதில், டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகள் கிறிஸ்துமஸ் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குளிர்கால கூட்டத் தொடர் மிகவும் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற அனைத்துக் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
இந்த நிலையில், சமீபகாலமாக '#justasking' என்ற ஹேஷ்டேக் மூலம், நடிகர் பிரகாஷ் ராஜ் பல கேள்விகளை எழுப்பி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று தனது ட்விட்டரில் பிரதமர் மோடியிடம் கேள்வி ஒன்றை பிரகாஷ் ராஜ் முன்வைத்துள்ளார்.
November 2017
அதில், 'ஏன் இன்னும் குளிர்காலம் வரவில்லை...?' என்று கேள்வி எழுப்பி அதற்கு சில விடைகளையும் அவரே குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது விடையாக, 'இன்னும் குளிரே வரவில்லை' என்றும்
இரண்டாவது விடையாக 'வேறு ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் பிஸியாக உள்ளீர்கள்' என்றும்
மூன்றாவது விடையாக 'தேர்தலுக்கு முன்பே பதில் சொல்ல மிகவும் சூடாகவும் சங்கடமாகவும் இருக்கலாம்' என்றும் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த கோடை காலத்தில் நடக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
குஜராத் தேர்தலுக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு, குளிர்கால கூட்டத் தொடரை தாமதப்படுத்துகிறது என்பதை குறிக்கவே இதுபோல பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார் என கூறப்படுகிறது.