அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு முன்பாக, இன்னும் இரண்டு ஆண்டுகளில், ராமர் கோயில் வடிவில் ரயில் நிலையம் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ரயில் நிலையத்தை ராமர் கோயில் வடிவத்திற்கு மாற்றியமைக்க முன்னதாக ரயில்வே பட்ஜெட்டில், ரூ.80 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.104 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, விரைவில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலை காண கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அயோத்தி ரயில் நிலையத்தை, கோயிலின் மாதிரி வடிவத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தி ரயில் நிலையம், தற்போதும் கோயில் வடிவத்திலேயே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது இந்த வடிவத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் பயணிகள் நெருக்கடி இல்லாமல் இருப்பதற்கான அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய சீரமைப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, ரயில் பிளாட்பார்ம் பகுதிகளில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற உள்ளன. இரண்டாம் கட்டமாக புதிய கட்டடத்தில் கூடுதல் கழிப்பிட வசதிகள் பயணிகள் தங்கும் அறைகள், டிக்கெட் கவுண்டர்கள் என பல்வேறு பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.