நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. நேற்றுமுதல் அமலுக்கு வந்தது. அப்போது பேசிய பிரதமர் மோடி, "இது ஒரு கட்சிக்கான வெற்றியல்ல, அரசிற்கான வெற்றியல்ல. நாட்டிற்கான வெற்றி. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணம். தேசிய வளர்ச்சிக்கான திட்டம். பொருளாதாரம் தொடர்பான முக்கிய நிகழ்வு இது. கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று 18 கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு அறிமுகமாகியுள்ளது இந்த ஜி.எஸ்.டி. முதலில் மாநிலங்களுக்க நிறைய சந்தேகம் இருந்தது. தொடர்ந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு அது களையப்பட்டது. சர்தால் படேல் 500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக காட்டினார். அதுபோலத் தான் பல வரிகள் ஒன்றுசேர்ந்து ஜி.எஸ்.டி ஆக உருவாகி உள்ளது. ஒரே தேசம், ஒரே வரி என்ற கனவு நனவானது" என்று கூறினார்.
பின்னர் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசிய போது, "குறித்த நேரத்தில் வேலையை முடித்து ஜிஎஸ்டி கவுன்சில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நிறைய வரிகளை உள்ளடக்கி எளிமையான வரி முறை ஜிஎஸ்டியில் அடங்குகிறது. நம் ஏற்றுமதிகளை இன்னும் போட்டி ரீதியாக ஆக்குவதற்கு இந்த ஜிஎஸ்டி உதவும். இது நுகர்வோருக்கும் விற்பனையாளர்களுக்கும் வலுவான ஊக்குவிப்பாகும்" என்றார்.
இருப்பினும், நடுத்தர மக்கள் பலரும் ஜி.எஸ்.டி.யை எதிர்த்து வருகின்றனர். ஹோட்டலிகளில் உணவுகளின் விலை உயர்ந்துள்ளதால், பேச்சுலர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. குறிப்பாக, குறைவாக சம்பாதிக்கும் பேச்சுலர்களின் பாடு திண்டாடி வருகிறது. ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக விற்பனை நடைபெறும் சாதாரண உணவகங்களுக்கு 2 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டு வந்தது. இதற்கு தற்போது 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உணவு விலைகளின் ஏற்றத்தால் தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்களில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஜி.எஸ்.டி. முறைக்கு ஆதரவு தெரிவித்து, பிரபல ராப் மற்றும் திரைப்பட பாடகர் பாபா சேகல், ஒரு பாடல் ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் யூடியூபில் தற்போது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.