முன்னாள் அரசு வழக்கறிஞர் ஒருவரது நோயை பசு மாட்டு கோமியம் குணப்படுத்தியது என பாஜக உறுப்பினர் மீனாட்சி லேகி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
பசுவானது புனித விலங்காக போற்றப்படுகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பசு மாடும், அது சார்ந்த விஷயங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல தவறான நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளில் நடந்து வருகின்றன. பசு பாதுகாவலர்களின் தாக்குதலுக்கு பெரும்பாலும் தலித் மற்றும் சிறுபான்மையினர் இலக்காவதும் இதில் சிலர் உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதையும், சட்டங்கள் மீறப்படுவதையும் அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, பசு மாட்டுக் கோமியம் குறித்த சர்ச்சையும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பசுவின் சிறுநீரில் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே வீடுகளில் கிருமிகள் அண்டாமல் பாதுகாக்க அடிக்கடி பசுவின் சிறுநீரை நமது முன்னோர்கள் தெளித்து வந்ததாகவும், மனிதர்களின் பல நோய்களை நீக்கும் மருந்தாக பசு மாட்டு கோமியம் செயல்படுகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று பசு மாட்டு கோமியத்தை விற்பனை செய்தது. இந்நிலையில், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஒருவரது நோயை பசு மாட்டு கோமியம் குணப்படுத்தியது என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஒருவர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மாட்டு கோமியத்தை அவர் எடுத்துக் கொண்ட போது, முற்றிலும் குணமடைந்து விட்டார் என மீனாக்ஷி லேகி தெரிவித்தார்.
மேலும், சமீபத்திய வழிமுறைகளை பயன்படுத்தி கால்நடைகள் சார்ந்த பழங்கால அறிவியலை எடுத்துச் செல்லும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், சமீபத்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ராஷ்ட்ரீய கோமங் உத்பதக்தா திட்டத்தின் கீழ், ஹரியானா மாநிலத்தில் மரபணு மையம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.