குஜராத் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தேடுக்கப்பட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிர்த்தி இராணி ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு குஜராத் மாநிலத்தில் இருந்து மூன்று இடங்கள் காலியாகின. அதையடுத்து, பாஜக சார்பில் ஸ்மிர்த்தி இராணி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பல்வந்த்சிங் ராஜ்புத் (காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தவர்) உள்ளிட்ட மூன்று பேரும், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலும் களமிறங்கினர். மூன்று இடங்களுக்கு 4 பேர் வேட்பாளர்களாக களமிறங்கினர்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகிய எம்எல்ஏ-க்கள் ஆறு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாஜக-வில் அடுத்தடுத்து இணைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சி, தங்களது எம்எல்ஏ-க்கள் கட்சி மாறுவதைத் தடுப்பதற்காக, பெங்களூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அவர்களை தங்க வைத்தது. பெங்களூருவுக்கு செல்ல காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஏழு பேர் மறுத்ததால் அவர்கள் பாஜக-வுக்கு வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் திட்டவட்டமாக நம்பியது. இதனால், காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியானது.
பெரும் பரபரப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களில் இருவர் சட்டவிதிகளை மீறியதால், அவர்களது வாக்கு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 44 வாக்குகளுடன் அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிர்த்தி இராணி, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் ஆகிய மூன்று பேர் குஜராத் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிர்த்தி இராணி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். ஸ்மிர்த்தி இராணி சமஸ்கிருதத்தில் பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.