இந்தியப் பொருளாதாரம் சரிந்து விட்டது என யஷ்வந்த் சின்ஹா கூறிய குற்றச்சாட்டுகளை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என சிவ சேனா வலியுறுத்தியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில், பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியிருந்தார்.
அதில், ஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் 5.7 சதவிகிதத்தை சந்தித்துள்ளது. அரசின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் பொருளாதார சரிவுக்கும் தொடர்பில்லை என்கிறார். அதுவும் ஒரு வகையில் சரிதான். பொருளாதார சரிவு சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எரியும் தீயில் எண்ணை ஊற்றியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜிடிபி வளர்ச்சியை நிர்ணயிக்கும் முறையை 2015ம் ஆண்டில் அரசு மாற்றியுள்ளது. ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த முறையை கைவிட்டு புதிய முறையை கையாண்டதால் வளர்ச்சி விகிதத்தை அது 200 அடிப்படை புள்ளிகள் அதிகமாக காட்டுகிறது. பழைய முறையில் அளவிட்டால், பொருளாதார வளர்ச்சி விகிதம் உண்மையாக 3.7 சதவிகிதம் மட்டுமே. இது மேலும் குறைவாகக் கூட இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அவரது கருத்துக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், யஷ்வந்த் சின்ஹா கூறிய குற்றச்சாட்டுகள் தவறு என்றால் அதனை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என மாகாராஷ்டிர மாநில பாஜக அரசில் அங்கம் வகிக்கும் சிவ சேனா கூறியுள்ளது.
இதுகுறித்து தனது பத்திரிகையான சாம்னாவில், "தற்போது பொருளாதார நிலை மோசமாக உள்ளது. யஷ்வந்த் சின்ஹா கூறியது தவறு என்றால், அவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் தவறு என நிரூபிக்க வேண்டும். பாஜக மூத்த தலைவர்கள் கூட பொருளாதாரத்தின் தோல்வியுற்ற நிலை குறித்து அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக பேசினால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வரலாம் என்று பயப்படுவதால் எதையும் அவர்களால் சொல்ல இயலவில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் போன்ற வல்லுநர்கள் பொருளாதாரத்தின் நிலையை வெளிப்படுத்த முயன்ற போது அவை மூடி மறைக்கப்பட்டன. இப்போது நிதித்துறையை நீண்ட காலம் கவனித்த பாஜக-வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சில விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார். எனவே, அவர் நேர்மையற்றவர் என்றோ, தேசவிரோதி என்றோ இனி சித்தரிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.