சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் என கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் சுமார் 60 பேர் மூளை வீக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையடுத்து 12-ம் தேதியன்று 11 குழந்தைகளும், 13-ம் தேதி (நேற்று) ஒரு குழந்தையும் மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளன. இதனால், குழந்தைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 72-ஆக உயர்ந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மருத்துவமனைக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த சோக வடு நெஞ்சை விட்டு நீங்காத நிலையில், இதேபோன்றதொரு மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதற்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடே காரணம் என கூறப்படுகிறது.
அதேசமயம், "ஆக்சிஜன் சப்ளையில் குறைவு இருந்தது. ஆனால், குழந்தைகள் உயிரிழப்புக்கு அது காரணம் அல்ல. உடல்நிலை கோளாறே காரணம்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை இயக்குனர் பிரசன்னா கூறுகையில், "ஆக்சிஜன் அளவு குறைந்தை உடனடியாக கவனித்த பணியில் இருந்த மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டு விட்டது" என்றார்.
இதனிடையே, ஆக்சிஜன் விநியோகம் செய்யும் பனியின் பொறுப்பாளராக இருந்த நபரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பனியின் போது அவர் மதுபோதையில் இருந்ததால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ராமன் சிங், இதுகுறித்த விசாராணைக்கு உத்தரவிட்டுள்ளார்.