Congress President Polls 2022: திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் உள்கட்சி தேர்தலில் 96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைவர் பதவிக்கு காங்கிரஸின் மூத்தத் தலைவரான சசி தரூர், மல்லிகார்ஜூன கார்கே இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் இன்று பதிவான வாக்குகள் புதன்கிழமை (அக்.19) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தல் குறித்து பேசிய தலைமை, “தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.
96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன” எனத் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் காங்கிரஸ் பிரமுகர்களின் வாக்குகள் கார்கேவிற்கே கிடைத்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
எதிரும்- புதிரும்
80 வயதான மல்லிகார்ஜூன கார்கேவை பொறுத்தமட்டில், சோனியா காந்தி குடும்பத்தின் அதிகாரப்பூர்வமற்ற வேட்பாளராக உள்ளார் என்றும் சசி தரூர் தன்னிச்சையாக தேர்தலை சந்திக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக உள்கட்சி தேர்தல் குறித்து பேசிய கார்கே, “காங்கிரஸில் சோனியா காந்திதான் முதன்மையானவர். அவரின்றி ஒன்றும் கிடையாது. நான் எந்த சந்தேகம் எழுந்தாலும் அவரிடம் ஆலோசனை கேட்பேன். காந்தி குடும்பத்தையும் காங்கிரஸையும் பிரிக்க முடியாது” என்றார்.
இதற்கிடையில் திருவனந்தபுரத்தில் வாக்களித்த 66 வயதான சசி தரூர், “காங்கிரஸின் எதிர்காலம் தொண்டர்கள் கையில்தான் உள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை போன்று இந்தத் தேர்தலும் காங்கிரஸிற்கு எழுச்சி கொடுக்கும்” என்றார்.
137 ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு உள்கட்சி தேர்தல் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்துள்ளது.
2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர், காந்தி குடும்பம் அல்லாதோர் காங்கிரஸிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் முன்வைத்தனர்.
இது பலத்த சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி இறங்கினார். தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி கட்சிப் பொறுப்பை கவனித்துக் கொண்டார்.
அதன்பின்னர் நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்தக் கோரிக்கை மீண்டும் பலமாக எதிரொலிக்க தொடங்கியது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சசி தரூருக்கு ஆதரவு அளித்தார். அதேபோல் காஷ்மீரிலும் கட்சியின் முன்னாள் தலைவர் ஆதரவு தெரிவித்தார்.
எனினும் மற்றவர்கள் வெளிப்படையான ஆதரவு அளிக்க முன்வரவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“