டெல்லியின் தெற்கு பகுதியில் டிஸ்ஹசாரி நீதிமன்றத்தில், கடந்த 2ம் தேதி இங்கு வாகனம் நிறுத்தம் தொடர்பாக போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக உருமாற, சகேட் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் பணியில் இருந்த ஒரு போலீஸ் மீது சில வக்கீல்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
இதுவரை நடந்த மோதல்களில் 20 போலீசாரும், 8 வக்கீல்களும் காயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், போலீசாரின் கார் உள்பட 20 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து, வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் இன்று போலீசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் மற்றும் சில மாநிலங்களை சேர்ந்த போலீஸ் சங்கங்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்ட போலீசாரை சமாதானப்படுத்திப் பேசிய டெல்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், 'சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் நாம் நமக்கான கடமையை சரிவர செய்யவேண்டும். ஆகையால், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போலீசார் அமைதியான முறையில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்’ என தெரிவித்தார்.
இருப்பினும் போலீசார் பணிக்கு செல்லாமல் இன்று மாலைக்கு பின்னும் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசாருக்கு ஆதரவாக அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதி அருகே மெழுகுவர்த்திகளை ஏற்றி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தனர்.
இதற்கிடையில், போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சையுடன் நிவாரணத்தொகையும் அளிக்கப்படும் என டெல்லி துணைநிலை கவர்னர் அனில் பைஜால் இன்றிரவு தெரிவித்தார்.
Incident involving police & lawyers unfortunate. All should take a balanced view of it based on facts in public domain. Countrywide, police stands in solidarity with those police personnel subjected to physical assault & humiliation. Condemn all attempts to break law, by anyone!
— IPS Association (@IPS_Association) November 4, 2019
11 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்து வந்த நிலையில், உயர் அதிகாரிகளின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் காயம் அடைந்த காவல்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு அளிக்கப்படும் என்று காவல்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மோதல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.