பிரதமர் மோடியின் வீடு, ராஜீவ் சௌக் மெட்ரோ ஸ்டேஷன், பங்களா சாஹீப் சீக்கிய கோவில் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக டெல்லி போலீசாருக்கு வந்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
புதன் கிழமை காலை 8.30 மணியளவில் டெல்லி போலீசாருக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, பிரதமர் மோடியின் வீடு, ராஜீவ் சௌக் மெட்ரோ ஸ்டேஷன், பங்களா சாஹீப் சீக்கிய கோவில் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக தெரிவித்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவர் குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் சோதனை நடத்தியதில், அந்த செய்தி வதந்தி என்று தெரியவந்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
அழைப்பு வந்த செல்ஃபோன் எண்ணானது பேசி முடித்தவுடனேயே அணைத்து வைக்கப்பட்டதாகவும், அந்த நபரை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
கடந்த வாரமும் இதேபோல் ஒருவர் டெல்லி போலீசாரை தொடர்புகொண்டு டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக தெரிவித்தார். அதன்பின் அந்நபரை போலீசார் கைது செய்தவுடன், பொழுதுபோக்குக்காக அவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.