பிரதமர் நரேந்திர மோடியின் வீடு முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் 9 பேரை அம்மாநில காவல்துறையினர் தடுப்பு காவலில் வைத்தனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இந்த போராட்டம் 74-வது நாளாக இன்றும்(புதன்கிழமை) நீடித்தது.
தமிழக விவசாயிகள் சிலரை பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் மனு அளிக்க போலீஸார் அழைத்து சென்றனர். ஆனால், மனுவை பிரதமர் அலுவலகத்தில் கொடுக்குமாறு, பிரதமர் இல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ் வாகனத்தில் விவசாயிகளை ஏற்ற முற்பட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி வீட்டின் போராட்டத்தல் குதித்த தமிழக விவசாயிகள், அப்பகுதியில் உள்ள சாலையில் படுத்து உருண்டனர்.
இதையடுத்து, சாலைமறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் 9 பேரை காவல்துறையினர் தடுப்பு காவலில் வைத்தனர். பிரதமர் நரேந்திர மோடி இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் பாதுகாப்பு வளையத்துக்கு உட்பட்ட பகுதியாகும். எனவே, அங்கு முற்றுகையிட்ட விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து மேலதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.