கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, இரவு 8 மணியளவில் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். கருப்புப்பணத்தை மீட்பதற்காகவும், தீவிரவாத குழுக்களிடம் சிக்கியுள்ள பணத்தை குறிவைத்தும் இந்த திட்டம் செயல்படுத்தபடுவதாகவும் அறிவித்தார். அதோடு, '100 நாட்களுக்குள் மட்டும் மக்கள் பிரச்சனையை சந்திப்பார்கள். மக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள்' என அறிவித்தார்.
அதன் பின் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற, மக்கள் வங்கிகளில் நாள் கணக்கில் தவம் கிடந்தார்கள். வங்கியில் பணம் செலுத்தியவர்கள், புதிய பணத்தை எடுக்க ஏ.டி.எம் மையங்களின் முன் குவிந்தனர். பல ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சிறு மற்றும் பெரு தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. சரியான நேரத்திற்கு பணம் கிடைக்காததால், பல உயர் பலிகளும் ஏற்பட்டது.
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பெற்றவர்கள், அதை சில்லரையாக மாற்ற முடியாமல் தவித்தனர். ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மூன்று மாதங்கள் மக்கள் படாத பாடுபட்டனர். ஆனால், கருப்பு பணம் மீட்கப்பட்டதாய் எந்த தகவலும் இல்லை. மக்களிடம் எவ்வளவு பணம் புழங்கியதோ, அதற்கு நிகராக வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியானது.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பலன் தராது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனே இந்த திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளபடி, 4.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், 1.48 லட்சம் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்த 1.48 லட்சம் கணக்குகள் அனைத்திலும் 80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள நோட்டுகளை இந்தக் கணக்குகளில் வரவு வைத்துள்ளனர். அதேபோல் 2 லட்சம் முதல் 80 லட்சம் வரை வரவு வைக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 1.09 கோடி.
தன்னுடைய ஆண்டறிக்கையில், 15.4 லட்சம் கோடி ரூபாய்க்கான அதிக மதிப்புள்ள நோட்டுகளில், 15.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. அதாவது, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய்களில் 99% திரும்ப வந்துவிட்டதாக கூறியது.
பணமில்லாப் பரிவர்த்தனைதான் பிரதான நோக்கமாகப் பணமதிப்பிழப்பில் முன்னிறுத்தப்பட்டது. அதனை நோக்கி மக்களை மத்திய அரசு நகர்த்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வங்கிகளில் பணப்புழக்கம் 2016-ம் ஆண்டு இறுதியில் திண்டாட்டமாக இருந்தது. அதனால் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது இயல்பாகவே அதிகரிக்கச் செய்தது. 2015-16-ல் 117.36 கோடியாக இருந்த டெபிட் கார்டு பரிவர்த்தனை, 2016-17-ல் 239.93 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கும் மேலான வளர்ச்சியே. வாலட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 121.57 கோடி பரிவர்த்தனை அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் பணமதிப்பிழப்பு தினத்தை கறுப்பு தினமாக அனுசரித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. மழை, வெள்ள பாதிப்புக்கு உள்ளான சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
மதுரையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மதுரை அண்ணாநகரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். முதலில், அண்ணாநகரில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், பின்னர் ஒப்புதல் அளித்தனர்.
திருச்சி - முதன்மைச் செயலாளர் துரைமுருகன், திண்டுக்கல் - துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி, நாமக்கல் - துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, திருப்பூர் - துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருநெல்வேலி - அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, தஞ்சாவூர் - டி.ஆர்.பாலு, சேலம் - திருச்சி சிவா ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.