பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ரூபா மவுட்கில், "கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும், சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு ரூ.1 கோடியும்" சசிகலா தரப்பினர் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பிய அவர், ஊடகங்களிலும் இது குறித்து பேசினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவினர் இன்று தங்களது விசாரணையை தொடங்கவுள்ளனர்.
இதனிடையே, குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவும், டிஐஜி ரூபாவும் நேற்று அடுத்தடுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். முதலில் சத்யநாராயண ராவும், அவரைத் தொடர்ந்து ரூபாவும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சில முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல், சிறைக்கு சத்யநாராயண ராவ் வந்து சென்றதால், அங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய ரூபா வந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய சிறைத்துறை டிஐஜி ரூபாவை, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறைக்கு பணியிட மாற்றம் செய்து கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.