பதற்றம் நிலவி வரும் டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெற இந்தியா - சீன நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையில், இந்தியா - சீனா - பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் இணைகின்றன. இந்த பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டது.
சர்ச்சை நிலவி வரும் இந்த இடத்திற்கு பூடான் உரிமை கொண்டாடுகிறது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. மேலும்,"சிக்கன்ஸ் நெக்" அல்லது "சிலிகுரி காரிடார்" எனப்படும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை ஏனைய இந்தியாவுடன் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிலபரப்பை சீனா எளிதாக சென்றடைய இது வழி செய்யும் என்பதால் இந்தியா கவலை கொண்டுள்ளது.
இதனையடுத்து, சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. அங்கு ராணுவ வீரர்களை குவித்தது. பதிலுக்கு சீனாவும் தங்களது ராணுவத்தை அங்கு குவித்துள்ளது. இதனால், எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது.
இந்நிலையில், டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெற இந்தியா - சீன நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இரு நாடுகளிடையேயான தூதரக அளவில் கடந்த சில வாரங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அப்போது, நமது நிலைப்பாட்டையும், கவலைகளையும் தெரிவித்தோம். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு படைகளை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, டோக்லாம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு நாட்டு படையினரையும் திரும்பப் பெறும் பணிகள் தொடங்கியுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், "டோக்லாமில் உள்ள படைகளையும் தளவாடங்களையும் இந்தியா திரும்பப் பெறவுள்ளது. சீனாவும் அதன் வரலாற்று எல்லை உடன்பாட்டின்படியும், இறையாண்மை உரிமைகளின்படியும் செயல்படும். இந்தியாவுடனான நட்புறவை சீனா பெரிதும் மதிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுமார் மூன்று மாதங்களாக அப்பகுதியில் நிலவி வந்த பதற்றம் சற்று குறைந்துள்ளது.