ஏர்செல் மேக்சிஸ் ஊழல் புகாரினை விசாரிக்கும் ராஜேஷ்வர் சிங், 2011ல் ஒரு படத்தில் நடித்திருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிலும் கூட அவர் ஊழலை எதிர்த்துப் போராடும் ஒரு நேர்மையான அதிகாரியாகவே வலம் வருகின்றார். அப்படத்தினை இயக்கியவர் ராஜேஷ்வரின் மைத்துனர் ஒய்.பி. சிங். காவல்துறை அதிகாரியாக இருந்து பின்னர் சட்டம் படித்த அவருடைய சகோதரி, அபா சிங்கும் அப்படத்தில் நடித்திருக்கின்றார். படத்தின் முதல் காட்சியிலேயே ராஜேஷ்வர் வீர நடைபோட்டு வந்து, நேர்மை, கடமை, மற்றும் கண்ணியம் என்ற நினைப்பினை உருவாக்குவதாகவே இருக்கும்.
லக்னோ பகுதியில் கூடுதல் இயக்குநராக பொறுப்பில் இருக்கும் ராஜேஷ்வரை, அமலாக்கத்துறை தலைமையகம் அமைந்திருக்கும் கான் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி பார்க்கலாம். அவர் 2ஜி முறைகேடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளை அங்கு தான் விசாரித்து வருகின்றார். 2009ல் உத்திரப் பிரதேசத்தில் இருந்த காவல்துறை அதிகாரி, அமலாக்கத்துறைக்கு துணைப் பொறுப்பாளராக வந்து சேர்ந்தார். மீடியாக்கள் அவரை ’என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட்’ என்று ஊருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
இந்தியாவில் நடைபெற்ற மிக முக்கியமான ஊழல் வழக்கான 2ஜி முறைக்கேடுகளை இவர் விசாரித்து வருகின்ற நேரத்தில் இவர் மீதே ஊழல் புகார்கள் போடப்பட்டன. 2ஜி வழக்கு போன்ற சவாலான வழக்குகளை அவர் மேற்பார்வை செய்து வருவதால் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்குகளை காரணம் காட்டி, தண்டனை பெற்றுத்தரவோ, இடம் மாற்றம் செய்யவோ கூடாது என்று உத்தரவிட்டனர்.
ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடந்த புதன் அன்று, ராஜேஷ்வருக்கு அளித்த பாதுகாப்பு அம்சங்களை நீக்கி உத்தரவிட்டது. மேலும் அரசு, அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை எந்தவித தடைகளும் இன்றி தொடரலாம் என்று கூறியது.
"நீதிமன்றங்கள், சுதந்திரமான நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கின்றது. ராஜேஷ்வர் குற்றமற்றவர் என்றால் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை” என்று அதிகாரிகள் கூறினார்கள். ராஜேஷ்வர் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு பிரச்சனைகள் பற்றிய புகாரினைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றது பிரதமர் அலுவலகம்.
ஆரம்பத்தில் இருந்தே ராஜேஷ்வரின் நடவடிக்கைகள் முன்னாள் மத்திய அமைச்சகத்திற்கு நெருக்கடியாக அமைந்திருக்கின்றது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தினால் ராஜேஷ்வரின் பதவி உயர்வு போன்றவைகள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அவருடைய பதவி உயர்த்தப்பட்டது. தற்போது ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் என இருவரையும் விசாரித்து வருகிறார் ராஜேஷ்வர். பாஜகவின் மூத்த உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி ராஜேஷ்வருக்கு ஆதரவாக இருக்கின்றார். மேலும், 2ஜி வழக்கில் இருந்து ராஜேஷ்வரை வெளியேற்றி விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் வேலைகள் நடக்கின்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கினால் என் வாழும் சூழல் மாறிவிட்டது. என்னால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள இயலாது என்பதால் என்னை இவ்வழக்கில் இருந்து நீக்கிவிடுங்கள் என ராஜேஷ்வர் ஏற்கனவே அரசிடம் முறையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.