சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு என பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்.
துணை குடியரசுத் தலைவராக இருந்த ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் (நேற்று) முடிவடைந்தது. மாநிலங்களவை தலைவராகவும் குடியரசு துணைத் தலைவர் செயல்படக் கூடியவர். ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் முடிவடையும் முன்னதாகவே அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
அதன்படி, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. ஆளும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநரும், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியும் நிறுத்தப்பட்டனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், தனது மத்திய அமைச்சர் பதவியை வெங்கையா நாயுடு ராஜினாமா செய்தார்.
நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவுகள் அன்றைய தினம் மாலையே அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வெங்கையா நாயுடு அமோக வெற்றி பெற்றார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, நாட்டின் 13-வது துணைக் குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில்,நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு என புகழாரம் சூடியுள்ளார். மேலும், ஒரு விவசாயியின் மகனான வெங்கையா நாயுடுவுக்கு விவசாயத்துறை சந்திக்கும் பிரச்னைகள் நன்றாகவே தெரியும். அவரது பேச்சு திறன்கள் அனைவரும் அறிந்ததே எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
முன்னதாக, பதவியேற்பு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,"அதிகம் பேசக்கூடியவரான வெங்கையா இனி பேச்சைக் குறைத்துக்கொண்டு, எம்.பி.க்கள் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பை கொடுக்க வேண்டியிருக்கும். இது நிச்சயம் அவருக்கு சவால் தான்" என நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.