![ஆதிவாசிகள் நாட்டின் முதல் உரிமையாளர்கள்.. பா.ஜ.க அவர்களின் நிலத்தை பறிக்கிறது: ராகுல் விமர்சனம்](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-21-at-21.31.25.jpeg)
குஜராத் சட்டபேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி குஜராத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ராகுல் நேற்று (நவம்பர் 21) 2 இடங்களில் ராஜ்கோட், சூரத் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். பேரணியில் கலந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மஹுவா தொகுதியில் உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் கட்சி ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக நிற்கிறது. அவர்கள் "நாட்டின் முதல் உரிமையாளர்கள்" என்று கூறுகிறது. ஆனால் பா.ஜ.க அவர்களை வனவாசிகள் என்றும் அவர்களின் நிலத்தை பறித்து தொழிலதிபர்களுக்கு வழங்குகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
தனது குடும்பம் எப்போதும் ஆதிவாசிகளுடன் "ஆழமான உறவை" கொண்டிருக்கிறது. அவர்கள் நாட்டின் முதல் உரிமையாளர்கள் என எனக்கு சொல்லிக் கொடுத்த மறைந்த இந்திரா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
ஆதிவாசிகள் முன்னேறுவதை பா.ஜ.க விரும்பவில்லை
தொடர்ந்து ராகுல் கூறுகையில், "நாடு உங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. பா.ஜ.கவினர் உங்களை ஆதிவாசி என்று அழைக்கவில்லை. அவர்கள் உங்களை என்னவென்று அழைக்கிறார்கள்? வனவாசி. நீங்கள் நாட்டின் முதல் உரிமையாளர்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. நீங்கள் காட்டில் வாழ்கிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள், அதாவது நீங்கள் நகரங்களில் வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. நீங்கள் முன்னேறுவதை அவர்கள் விரும்பவில்லை. உங்கள் குழந்தைகள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், விமானங்களில் பறக்கவும், ஆங்கிலத்தில் பேசவும் அவர்கள் விரும்பவில்லை" என்றார்.
இதோடு அவர்கள் நிற்கவில்லை, உங்களிடமிருந்து காடுகளை பறிக்க வேலை செய்கிறார்கள். இன்னும் 5-10 ஆண்டுகளில் அவர்களின் பணி முன்னேறினால், காடு முழுவதும் அவர்களின் 2-3 தொழில் அதிபர் நண்பர்களின் கைகளில் சென்றுவிடும். நீங்கள் தங்குவதற்கு இடமில்லை, கல்வி இல்லை, சுகாதாரம் இல்லை, வேலை வாய்ப்புகள் இல்லை என்று கூறினார்.
'இது எல்லாம் காங்கிரஸ், பா.ஜ.கவிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. காங்கிரஸ் பி.இ.எஸ்.ஏ சட்டம், நில உரிமை "புரட்சிகர சட்டங்கள்" கொண்டு வந்தது. ஆனால் பா.ஜ.க இதை செயல்படுத்தவில்லை. அவர்கள் இந்த சட்டங்களை பலவீனப்படுத்துகிறார்கள், அவற்றைப் பயன்படுத்தவில்லை. இதுதான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டம், உதவித்தொகை, நில உரிமைகளை வழங்கினோம். ஆனால் அவர்கள் எதுவும் வழங்கவில்லை. உங்கள் நிலத்தை மட்டுமே பறிக்கிறார்கள்.
ஒருபுறம் உரிமைகள்; மறுபுறம் கவலை
முடிவு உங்கள் முன் உள்ளது. ஒருபுறம் காங்கிரஸ், ஆதிவாசிகள். மறுபுறம் பா.ஜ.க வனவாசிகள். ஒருபுறம் உங்கள் நிலம், உங்கள் உரிமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு. மறுபுறம் கவலை, உங்கள் கனவுகள் நிறைவேறவில்லை. உங்கள் வரலாறு, வாழ்க்கை முறை என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். காடு, நிலம் மற்றும் நீர் பற்றி சுற்றுச்சூழல் தலைவர்களை விட ஆதிவாசிகளுக்கு நன்றாகத் தெரியும்" என்றார்.
"தலைவர்களின் பொறுப்பு உங்கள் பேச்சைக் கேட்பதுதான். விமானம், ஹெலிக்காப்டர்களில் பறந்து அல்ல, காலால் நடந்து சென்று கேட்க வேண்டும். நீங்கள் சொல்வதைக் கேட்பது எங்கள் வேலை,” என்று பாரத் ஜோடோ யாத்திரையைக் குறிப்பிட்டு பேசினார். மேலும், இந்திய நாட்டிற்கு வழி காட்டியதற்காக "குஜராத்தி" மகாத்மா காந்தியை அவர் பாராட்டினார்.
யாத்திரை, அன்பைப் பற்றியது. ஆனால் விவசாயிகள், இளைஞர்கள், ஆதிவாசிகள் மகிழ்ச்சியாக இல்லை. விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை, காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை, அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை, இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள், கனவுகள் சிதைந்துள்ளன. குழந்தைகள் பொறியியலாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டு, பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து படிக்க வைத்தனர். ஆனால் இன்று அவர்கள் கூலித்தொழிலாளியாக உள்ளனர்'' என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.