இந்திய ரயில்வே துறையில் வி.ஐ.பி., கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில், ரயில்வே நிர்வாகம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, ரயில்வே வாரிய தலைவர் வரும் போது பூங்கொத்து கொடுப்பதற்கும், ரயில்வே ஊழியர்கள் அதிகாரிகள் வீட்டில் பணிபுரிவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய அரசு, இந்திய ரயில்வேயில் விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற பியூஸ் கோயலும் விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், "ரயில்வே வாரிய தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்கள் ஆய்வுக்காக வரும் போது, ரயில் நிலைய மேலாளர், உயர் அதிகாரிகள் பூங்கொத்துகள், பரிசு வழங்கக்கூடாது.
உயர் அதிகாரிகள் வீட்டில் ரயில்வே ஊழியர்கள் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், தங்கள் வீட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். உயர் அதிகாரிகள் அதிக கட்டணம் மற்றும் சொகுசு வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வதை விட்டுவிட்டு, 3 அடுக்கு, படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய வேண்டும். பயணிகளுடன் கலந்து அவர்களின் பிரச்னைகளை அறிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியபோது, "பூங்கொத்து மற்றும் பரிசுகள் போன்றவற்றை இனி எந்த அதிகாரிகளும் கொடுக்கக்கூடாது. ரயில்வே வாரிய தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்கள் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் வரும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. தற்போது 30 ஆயிரம் தண்டவாள பராமரிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் வீட்டில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உயர் அதிகாரிகள் வீட்டில் பணிபுரிந்தவர்களில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர். இதில் யாருக்கும் விலக்கு கிடையாது" என்று கூறினார்.