காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதற்குப்பதிலாக அவர்களுக்கு சிஆர்பிஎப் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா அவரது மகன் ராகுல் மற்றும் பிரியங்கா குடும்பத்தினருக்கு நாட்டின் உயரிய எஸ்.பி.ஜி., ( Special Protection Group) , சிறப்பு பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு அளித்து வந்தனர். பிரதமர், ஜனாதிபதியும் இந்த பாதுகாப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இந்த எஸ்.பி.ஜி., பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் இசட் பிளஸ் என்ற பாதுகாப்பு சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்படும். மத்திய பாதுகாப்பு படையினர் இதற்கான பொறுப்புகளை ஏற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உளவுத்துறை மற்றும் ரா உளவு பிரிவு அளிக்கும் தகவல்களை கொண்டே, மத்திய உள்துறை அமைச்சகம், விஐபிகளுக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பதை தீர்மானித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே, சோனியா காந்தி குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட சில மாதங்களிலேயே, சோனியா காந்தி குடும்பத்தினருக்கும் சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.