பஞ்சாப் இடைத்தேர்தலில் காங்கிரஸின் வெற்றி, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீபாவளி பரிசு என அந்தக் கட்சியினர் கூறுகின்றனர்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபிறகு பெரும்பாலான மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அந்தக் கட்சிக்கே சாதகமாக அமைந்தன. முதல் முறையாக பாஜக ஜெயித்த ஒரு தொகுதியை கோட்டை விட்டிருக்கிறது. அது பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி! இந்தத் தொகுதி எம்.பி-யும், பாஜக மூத்த தலைவருமான வினோத் கண்ணா மரணமடைந்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு அக்டோபர் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இங்கு 56 சதவித வாக்குகள் பதிவானது. பஞ்சாப்பில் ஆட்சி அமைத்த காங்கிரஸின் செல்வாக்கை உரசிப் பார்க்கும் தேர்தலாகவும் இது கருதப்பட்டது. இங்கு அக்டோபர் 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 11 வேட்பாளர்கள் களம் கண்டாலும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் போட்டி!
காங்கிரஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றதும் அதன் வெற்றி உறுதி செய்யப்பட்டது. பாஜக வேட்பாளர் ஸ்வாரன் சலாரியா இரண்டாவது இடத்தையும், ஆம் ஆத்மியின் வேட்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் காஜுரியா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாகர், ‘குர்தாஸ்பூர் இடைத்தேர்தல், பிரதமர் மோடியின் கொள்கையின் மீதான மக்களின் கோபத்தை காட்டியிருக்கிறது’ என்றார். பாஜக வசம் இருந்த குர்தாஸ்பூர் தொகுதி இப்போது காங்கிரஸ் வசம் சென்றது. குர்தாஸ்பூர் தொகுதியில் 1998, 1999, 2004 மற்றும் 2014 பாராளுமன்ற தேர்தல்களில் பாஜக-வின் வினோத் கண்ணாவே வெற்றி பெற்றார்.
2009 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மீண்டும் 2014-ல் நடைபெற்ற தேர்தலில் வினோத் கண்ணா வெற்றி பெற்றார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாகர் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரை தோற்கடித்து உள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ள ராகுல் காந்திக்கு நாங்கள் மிகவும் அருமையான தீபாவளி பரிசை கொடுத்து உள்ளோம்’ என்றார். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் ராகுலுக்கான தீபாவளி பரிசு என கொண்டாடி வருகின்றனர்.