Vehicle Insurance Policy Update: கார் அல்லது பைக் வாகனத்திற்கு ஆண்டுதோறும் தவறாமல் இன்சூரன்ஸ் செய்துவைத்திருப்பவர்கள், இந்த செய்தியை தவறாது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கார் அல்லது பைக் போன்ற வாகனங்கள் விபத்தில் சிக்கி, அதை மீண்டும் பயன்படுத்த முடியாதநிலையில், நாம் இன்சூரன்சிற்காக கிளெய்ம் செய்யும் போது, வாகனத்தின் பதிவு சான்றிதழை (Registration Certificate (RC)) ரத்து செய்தால் மட்டுமே, இனி முழுத்தொகையையும் பெற முடியும் என்ற புதிய விதியை இன்சூரன்ஸ் கண்காணிப்பு ஆணையம் (IRDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.
விபத்திற்குள்ளான வாகனங்களை பெறும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், அதனை ஸ்கிராப் டீலர்களிடம் விற்கும்முன், அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யாமல், ஸ்கிராப் டீலர்களிடம் செல்லும் வாகனங்களின் இஞ்ஜின் மற்றும் சேசிஸ் எண்கள், திருடப்படும் வாகனங்களுக்கு மாற்றப்பட்டு மீண்டும் சாலைகளில் இயங்கிவருகிறது. இதன்காரணமாக, வாகன திருட்டை தடுக்க முடியாமல், காவல்துறையினர் மிகுந்த சிரமப்படுகின்றனர். அவர்களுக்காகவும், திருட்டு பொருளை மக்கள் வாங்கி ஏமாறாமல் இருப்பதற்காகவும் இன்சூரன்ஸ் கண்காணிப்பு ஆணையம் இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.