Advertisment

ராஜீவ் காந்தி அறக்கட்டளைகளின் FCRA உரிமம் ரத்து; உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

ராஜீவ் காந்தி ஃபவுண்டேசன் மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆகியவற்றின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) உரிமத்தை, சட்டத்தை மீறியதாகக் கூறி உள்துறை அமைச்சகம் ரத்து

author-image
WebDesk
New Update
ராஜீவ் காந்தி அறக்கட்டளைகளின் FCRA உரிமம் ரத்து; உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

காந்தி குடும்பத்துடன் தொடர்புடைய அமைப்புகளான ராஜீவ் காந்தி ஃபவுண்டேசன் (RGF) மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை (RGCT) ஆகியவற்றின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) உரிமத்தை, சட்டத்தை மீறியதாகக் கூறி உள்துறை அமைச்சகம் (MHA) ரத்து செய்துள்ளது.

Advertisment

சீன மக்கள் குடியரசின் தூதரகத்தில் இருந்து RGF அறக்கட்டளை நிதி பெற்றதாக பா.ஜ.க குற்றம் சாட்டியதை அடுத்து, 2020 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. RGF மற்றும் RGCT இன் நிதியுதவியை விசாரிக்கத் தொடங்கிய குழு, பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) மற்றும் வருமான வரிச் சட்டம் ஆகியவற்றின் சந்தேகத்திற்குரிய மீறல் தொடர்பாக இந்த அமைப்புகளால் பெறப்பட்ட நிதியையும் ஆய்வு செய்தது.

இதையும் படியுங்கள்: தேர்தலில் இலவச வாக்குறுதிகளுக்கு கடிவாளம்? சி.ஏ.ஜி விவாதம்

அமலாக்க இயக்குநரகத்தின் (ED) சிறப்பு இயக்குனர் தலைமை தாங்கிய இந்தக் குழுவில், CIT, வருமான வரித் துறை நிதி அமைச்சகம்; நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.

உள்துறை அமைச்சகம் 2020 இல் ஒரு அறிக்கையில், “ராஜீவ் காந்தி ஃபவுண்டேசன், ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் இந்திரா காந்தி நினைவுச்சின்னம் ஆகியவற்றின் PMLA, வருமான வரிச் சட்டம், FCRA போன்ற பல்வேறு சட்ட விதிகளை மீறுவது தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்க அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை உள்துறை அமைச்சகம் அமைக்கிறது. அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குனர் குழுவிற்கு தலைமை தாங்குவார்,” என்று தெரிவித்தது.

இரண்டு அமைப்புகளும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் செயல்படுவதாலும், ராகுல் காந்தி உட்பட காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பதாலும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. RGF அறக்கட்டளையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஜூன் 25, 2020 அன்று, ஆளும் பா.ஜ.க, RGF அறக்கட்டளை பெற்றதாகக் கூறப்படும் நன்கொடை குறித்து கேள்வி எழுப்பி காங்கிரஸை குறிவைத்தது, பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, 2005-06 ஆம் ஆண்டில் தேசிய நலனுக்காக இல்லாத ஆய்வுகளுக்காக சீன மக்கள் குடியரசு மற்றும் சீனத் தூதரகத்திலிருந்து $300,000 RGF அறக்கட்டளை பெற்றுக்கொண்டதாகக் கூறினார். லடாக்கின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதன் பின்னணியில் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜே.பி. நட்டா 2020 இல், RGF அறக்கட்டளை சீனாவிடம் இருந்து பணம் வாங்கிய பிறகு நாட்டின் பாதுகாப்பு பற்றி பேச காங்கிரஸுக்கு தார்மீக உரிமை இல்லை என்று கூறினார். “2005-06 இல் சீன மக்கள் குடியரசு மற்றும் சீன தூதரகம் RGF க்கு ஒரு கொழுத்த தொகையை வழங்கியதை இன்று தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது காங்கிரசுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள ரகசிய உறவு. இவர்கள் சீனாவிடம் இருந்து நிதியை பெற்றுக்கொண்டு, அதன்பின்னர் நாட்டு நலனுக்காக இல்லாத ஆய்வுகளை நடத்துகின்றனர். அதற்கான சூழலை இந்த ஆய்வுகள் உருவாக்குகின்றன. அவர்கள் எதற்காக ஊதியம் பெற்றார்கள், என்ன ஆய்வு நடத்தினார்கள் என்பதை தேசம் அறிய விரும்புகிறது,” என்று அவர் மத்திய பிரதேச ஜன் சம்வத் என்ற காணொலி வாயிலான பேரணியில் உரையாற்றினார்.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அரசாங்கம் கையாண்டது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியதைக் குறிப்பிட்டு ஜே.பி.நட்டா, “அனைத்து அரசியல் கட்சிகளும் தேசத்தின் நலனுக்காக, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் மோடி ஜி, நீங்கள் முன்னேறுங்கள் என்று சொல்கின்றன. ஒரே ஒரு குடும்பம், அதன் நோக்கங்கள் மற்றும் கொள்கை, கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தது…. இன்று அவர்கள் சீனாவுக்கு எதிராக நிற்கிறார்கள், அவர்களைப் போல ஒரு காவலாளி இல்லை என்பதுபோல். ஒரு குடும்பத்தின் தவறுகளால் 43,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை நாம் இழக்க நேரிட்டது” என்று கூறினார்.

மேலும் “நீங்கள் $300,000 நன்கொடை பெற்றுக்கொண்டு எங்களுக்கு தேசியத்தை கற்பிக்கிறீர்கள். ஹாதி கே தாந்த் திகானேகே அவுர் கானே கே அலக் ஹோதே ஹைன்” என்றும் அவர் கூறினார்.

அதே நாளில், ஒரு செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் இதை எதிரொலித்தார்: “2005-06 ஆம் ஆண்டு RGF அறக்கட்டளையின் ஆண்டு அறிக்கையின் நன்கொடையாளர்கள் பட்டியல், அது மக்கள் சீனத் தூதரகத்திலிருந்து நன்கொடை பெற்றதை தெளிவாகக் காட்டுகிறது. . இந்த நன்கொடை எதற்காக பெறப்பட்டது என்பதை அறிய விரும்புகிறோம்” என்றார்.

2005-06 ஆம் ஆண்டில் RGF அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய கணக்கையும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை RGF ஆய்வு செய்து அது இந்தியாவிற்கு நன்மை பயக்கும் என்று பரிந்துரைத்த காலகட்டத்தின் ஆண்டறிக்கையை இரண்டு பா.ஜ.க தலைவர்களும் குறிப்பிடுகின்றனர்.

2005-06 ஆம் ஆண்டிற்கான RGF ஆண்டு அறிக்கை, சீன மக்கள் குடியரசின் தூதரகத்தை "கூட்டாளி நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களில்" ஒன்றாகக் குறிப்பிடுகிறது. RGF ஆல் ஊக்குவிக்கப்பட்ட கொள்கை சிந்தனைக் குழுவான ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் தற்கால ஆய்வுகளுக்கான (RGICS) நன்கொடையாளர்களின் பட்டியலில் சீனாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment