மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு கடந்த 7 ஆம் தேதி, நாடு முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வின் போது, மாணவ, மாணவியர் முறைகேடுகள் செய்வதை தடுக்க, சி.பி.எஸ்.இ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்தநிலையில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற, கண்காணிப்பாளர் உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக தளங்களில் இது விவாதப் பொருளாகவே மாறிப் போனது.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த சி.பி.எஸ்.இ, "சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியால் இவ்வாறு நடந்துவிட்டது" என்றது. மேலும், இதில் தொடர்புடைய நான்கு ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.எஸ்.இ விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.