/indian-express-tamil/media/media_files/2025/10/13/husband-and-wife-pm-kisan-fraud-2025-10-13-17-25-12.jpg)
Husband and wife claiming same benefit? Centre flags 31 lakh PM-Kisan cases after review
ஹரிகிஷன் ஷர்மா
பி.எம் கிசான் (PM-Kisan) திட்டத்தின் கீழ், ஒரு விவசாயக் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே நிதி உதவி பெற முடியும் என்ற விதி இருந்தும், நாடு முழுவதும் 17.87 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில், கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உதவித்தொகையைப் பெற்றுள்ளது மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய வேளாண்மை அமைச்சகம் அவசர கடிதம் அனுப்பியுள்ளது.
அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் தொடங்கப்பட்ட பி.எம்-கிசான் திட்டத்தில், ஒரே குடும்பத்தில் கணவன்-மனைவி இருவரும் உதவித்தொகை பெறுவதாக சந்தேகிக்கப்படும் 31.01 லட்சம் பயனாளிகளின் விவரங்களை மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது.
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் நடத்திய மிகப்பெரிய ஆய்வுப் பணியின் போது இந்த தகவல் வெளிவந்துள்ளது.
மொத்தம் 31.01 லட்சம் சந்தேகத்திற்குரிய வழக்குகளில், 19.02 லட்சம் பயனாளிகள் குறித்த சரிபார்ப்பு முடிந்துள்ளது.
சரிபார்க்கப்பட்ட வழக்குகளில், 93.98% அதாவது 17.87 லட்சம் பேர் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் நிதி உதவி பெற்று வருவது உறுதியாகியுள்ளது.
அக்டோபர் 15க்குள் சரிபார்க்க அவசர உத்தரவு!
இந்த அதிர்ச்சி தகவலை அடுத்து, மீதமுள்ள வழக்குகளையும் விரைவாகச் சரிபார்க்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய வேளாண்மை அமைச்சகம் கடிதங்கள் அனுப்பியுள்ளது. சரிபார்ப்புப் பணிகளை அக்டோபர் 15-க்குள் முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பி.எம். கிசான் திட்டத்தின் வரையறை என்ன?
பி.எம்-கிசான் திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, ஒரு நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பம் என்பது "கணவன், மனைவி மற்றும் மைனர் குழந்தைகளை" உள்ளடக்கியதாகும். இந்த வரையறைக்குள், கணவர், மனைவி அல்லது மைனர் குழந்தைகள் ஆகியோரில் ஒருவர் மட்டுமே ஆண்டுக்கு ₹6,000/- உதவித்தொகையை மூன்று தவணைகளில் (தலா ₹2,000) பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
பிற முறைகேடுகளும் கண்டறியப்பட்டன
கணவன்-மனைவி தவிர, குடும்ப உறுப்பினர்கள் நிதி பெறுவது தவிர, வேறு சில முறைகேடுகளும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன:
மைனர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மைனர்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் நிதி பெறுவதாக 1.76 லட்சம் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
முந்தைய நில உரிமையாளர்கள்: நிலப் பரிமாற்றம் பிப்ரவரி 1, 2019-க்குப் பிறகு நடந்திருந்தால், முந்தைய உரிமையாளரின் விவரங்களை அளித்திருக்க வேண்டும். ஆனால், முந்தைய நில உரிமையாளரின் விவரங்கள் "செல்லாதது அல்லது காலியாக" இருந்ததாக 33.34 லட்சம் சந்தேகத்திற்குரிய வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 8.11 லட்சம் வழக்குகளில், முந்தைய மற்றும் தற்போதைய நில உரிமையாளர் என இருவருமே உதவித்தொகையைப் பெற்று வந்துள்ளனர்.
வாரிசுதாரர் அல்லாத மாற்றம்: PM-கிசான் திட்டத்தில் நிலப் பட்டா மாற்றம் வாரிசுரிமை மூலம் நடந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால், 8.83 லட்சம் வழக்குகளில், பட்டா மாற்றத்துக்கான காரணம் வாரிசுரிமை அல்லாமல் வேறு ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தின் பலன்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய, ஜனவரி 1, 2025 முதல் புதிய பயனாளிகள் பதிவு செய்ய விவசாயி அடையாள எண் (Farmer ID) கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎம்-கிசான் திட்டம் ஒரு பார்வை
2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், மத்திய அரசின் 100% நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில் ஆகஸ்ட் 2, 2025 அன்று வாரணாசியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 20வது தவணையை 9.7 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு விடுவித்தார். மத்திய பட்ஜெட் 2025-26ல் இத்திட்டத்திற்காக ₹63,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்றக் குழு ஒன்று PM-கிசான் உதவித்தொகையை ஆண்டுக்கு ₹6,000-ல் இருந்து ₹12,000 ஆக இரட்டிப்பாக்கப் பரிந்துரைத்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.