/tamil-ie/media/media_files/uploads/2017/09/abhishek-goud-for-story_647_092017123632.jpg)
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் உள்ளூர் தலைவரின் மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் மல்கஜ்கிரி பகுதியின் ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் ஜெகதீஷ்வர் கௌடாவின் மகன் அபிஷேக் கௌடா. இவர் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், தங்களுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகிய சமூக வலைத்தளங்களில் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், தங்களை தனியே சந்திக்க வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி மூன்று பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், அப்பெண்களின் மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியதாகவும் அப்பெண்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் செவ்வாய் கிழமை அபிஷேக் கௌடாவை கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67ஏ-ன் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரது நண்பர்கள் இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சமீபகாலமாக, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர்களின் மகன்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், அக்கட்சியின் உள்ளூர் தலைவர் ராமகிருஷ்ணா கௌடாவின் மகன் வெங்கடேஷ் கௌடா, உணவகம் ஒன்றில் அவருடைய காரை எடுக்குமாறு கூறியவர்களை தாக்கினார்.
அதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சியின் ரெட்டி நகர் தலைவர் லஷ்மி பிரசன்னாவின் மகன் மனிஷ் கௌடா சுங்கச்சாவடி ஊழியர் கட்டணம் கேட்டதால், அவரை கத்தியால் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.