மும்பையில் டாக்ஸியில் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில், மிகவும் கொடூரமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உருப்பெறுகின்றன.
அதன் சமீபத்திய உதாரணமாக, மும்பையில் உள்ள தானேவில், டாக்ஸியில் சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணை, டாக்ஸி ஓட்டுநர், செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் திசைதிருப்பி வேறிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
சம்பவம் நடைபெற்றபோது, டாக்ஸி ஓட்டுநரின் நண்பர் ஒருவரும் உடனிருந்ததாகவும், அதன்பின், அப்பெண்ணை அவரது லாட்ஜில் விட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பெண் இதுகுறித்து தானே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பின், இச்சம்பவத்தில் தொடர்புடைய டாக்ஸி ஓட்டுநர் சுரேஷ் கோசாவியை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.