ஜார்கண்ட் மாநிலத்தில் விட்டின் முன் இறந்த பசுவின் உடல் கிடந்ததால், வீட்டிற்கே தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜார்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தில் உள்ள பெரியா ஹடியாடன் கிராமத்தில் உஸ்மான் அன்சாரி என்பவரின் வீடு உள்ளது. இந்நிலையில், அவரது வீட்டிற்கு வெளியே இறந்த மாட்டின் உடல் கிடந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் நடந்த இந்த சம்பவத்தின் போது ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பசுமாட்டின் இறந்த உடல் உஸ்மான் அன்சாரியின் வீட்டிற்கு வெளியே கடந்தது. இதனை கண்ட கும்பல் ஒன்று மாட்டிறைச்சிக்காக பசு கொல்லப்பட்டது என நினைத்து உஸ்மான் அன்சாரியின் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்.
சம்பவத்தின் போது வீட்டில் இருந்த உஸ்மான் அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸார் மீட்டனர். மீட்கப்பட்டவர்களை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, அங்கிருந்த கூட்டத்தினர் கடும் எதிர்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. எனவே, போலீஸார் வான்நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டு வந்தோம். மேலும், இந்த சம்பவத்தின்போது பாதுகாப்புக்கு சென்ற அதிகாரிகள் 200 பேரில், சுமார் 50 பேருக்கு காயம் ஏற்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.