ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவின் போது, டெல்லியின் மியான்வாலி பகுதியில், துணை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட மூன்று பேர், அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும், தகவலின் படி அந்த காரில் சுட்டுக் கொல்லப்பட்ட புபேந்திரா என்பவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன என தெரிகிறது.
நேற்று (ஞாயிறு) இரவு 11 மணியளவில், புபேந்திரா தனது காரில், நண்பர் அருண், பாதுகாப்பு அதிகாரி விஜய் ஆகியோருடன் அமர்ந்திருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம மனிதன் ஒருவன், காரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளான். இந்த கோர சம்பவத்தில், காரில் அமர்ந்திருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாக, உடனிருந்த கான்ஸ்டபிள் குல்தீப் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இருதரப்பிற்கு இடையேயான மோதலின் ஒரு பகுதியாக, இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.