மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் தலைமைச் செயலாளரான ராஜீவ் சின்ஹா கடந்த ஜூன் 7-ம் தேதி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற அடுத்த நாளே அதாவது ஜூன் 7-ம் தேதி அன்று மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி, மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதாவது, 22 ஜில்லா பரிஷத்துகளுக்கான 928 இடங்கள், பஞ்சாயத்து சமிதிகளுக்கான 9,730 இடங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கான 63,239 இடங்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடந்தது.
இதனிடையே, பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் மேற்கு வங்கத்தில் வன்முறை வெடித்தது. துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்ட போதிலும், மாநிலத்தில் வன்முறை தலைவிரித்து ஆடியது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு 9 பேர் கொல்லப்பட்ட நிலையில், வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாயத்துத் தேர்தல்களுக்கு முன்னதாகவே வன்முறை வெடிக்கத் தொடங்கிய நிலையில், ஜூன் 17 அன்று மேற்கு வங்க ஆளுநர் சி.வி ஆனந்த போஸ் 8 பேர் கொண்ட ராஜ்பவன் ஊழியர் குழுவை "அமைதி அறை"யை நிர்வகிக்க நியமித்தார். இந்த குழுவுக்கு ஜூலை 8 ஆம் தேதி வாக்குப்பதிவு நாளில் வன்முறை தீவிரமடைந்தது முதல், தொலைபேசி அழைப்புகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது.
தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்து வரும் இந்த குழு மேற்கு வங்கத்தில் தேர்தல் தொடர்பான வன்முறையில் அச்சுறுத்தல்கள் மற்றும் கொலைகள் முதல் நாசவேலை பற்றிய புகார்கள் வரை அனைத்தையும் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் வடக்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவிலிருந்து தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் தெற்கில் நாடியாவிற்கு அழைப்புகள் வந்துள்ளன.
ஆளுநரின் சிறப்புப் பணி அதிகாரி (OSD) சந்தீப் ராஜ்புத் தலைமையிலான குழு வழங்கிய மதிப்பீட்டின்படி, அமைதி அறைக்கு இன்றுவரை 8,000 புகார்கள் வந்துள்ளன. காலனித்துவ கால கட்டிடத்தின் முதல் மாடியில் ஒரு அறைக்கு வெளியே குழு செயல்படுகிறது மற்றும் பலருக்கு நம்பிக்கையின் ஆதாரமாக தொடர்கிறது.
“எங்கள் குழுவில் எட்டு பேர் உள்ளனர், மாண்புமிகு ஆளுநர் நேரடியாகக் கண்காணிக்கிறார். நாங்கள் வாரத்தில் 7 நாட்கள் 24 மணி நேரமும் (24×7) வேலை செய்கிறோம். osd2w.b.governor@gmail.com என்ற மின்னஞ்சல் ஐடி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை மின்னஞ்சல் செய்யலாம். மேலும், (033) 22001641 என்ற ஹெல்ப்லைனிலும் தொடர்பு கொள்ளலாம்.” என்று ராஜ் பவன் அமைத்துள்ள அமைதி அறையின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
மக்கள் ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கும்போது, அவர்களின் புகார்கள் அவர்களின் கிராமம், தொகுதியின் பெயர் மற்றும் மாற்று தொடர்பு எண்கள் போன்ற விவரங்களுடன் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் பல நேரங்களில், அமைதி அறையில் பணிபுரியும் நபர்களின் கூற்றுப்படி, அழைப்பாளர்கள் தங்கள் பெயர்கள் மற்றும் பிற அடையாளம் காணக்கூடிய விவரங்களை வெளியிட மிகவும் பயப்படுகிறார்கள். மேலும் தங்கள் பகுதியில் வன்முறையைத் தடுக்க காவல்துறை செயல்படுவதை உறுதிசெய்யுமாறு ராஜ்பவனைக் கேட்டுக்கொள்கிறார்கள்.
சந்தீப் ராஜ்புத் வழக்கமாக குறைகளை தொகுத்து, பின்னர் உடனடியாக நடவடிக்கை தேவைப்பட்டால் மாநில தேர்தல் ஆணையம் (SEC) அல்லது உள்ளூர் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும். சில சமயங்களில், ஆளுநரே உள்ளே நுழைகிறார் என்று குழு உறுப்பினர் ஒருவர் கூறுகிறார். கடந்த வாரம், வடக்கு 24 பர்கானாஸில் வசிக்கும் ஒருவர் அமைதி அறைக்கு டயல் செய்து, தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்ததாகவும், வீடு திரும்பினால் கொல்லப்படுவோம் என்று பயப்படுவதாகவும் கூறினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் அவரை மீண்டும் அழைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்று அறையில் இருந்த ஹெல்ப்லைனை நிர்வகிக்கும் ஒரு ஊழியர் கூறினார்.
“ஒரு பஞ்சாயத்து தேர்தல் வேட்பாளரின் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கெராவ் செய்யப்பட்டதாகக் கூறினார். அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று அவர் பயந்தார். நாங்கள் அவருக்கு உதவுவதாக உறுதியளித்தோம். பின்னர், உள்ளூர் போலீசார் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் மீண்டும் அழைத்தார். பின்னர் ராஜ்பவனுக்குச் சென்று நன்றி தெரிவித்தார். அவருடைய வார்த்தைகள் எனக்கு நினைவிருக்கிறது: 'எங்கள் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. உங்களுக்கு நன்றி' என்று கூறினார்.
பஞ்சாயத்து தேர்தலுக்காக 'அமைதி அறை' திறக்கப்பட்டது, ஆனால் எங்களுக்கு வரும் புகார்களின் வகை மற்றும் அளவு, அதை மேலும் நீட்டிக்க செய்தது. இன்றும் எங்களுக்கு அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன. சராசரியாக தினமும் 100 முதல் 180 புகார்கள் வருகின்றன. சில நேரங்களில் ஒரு நாளைக்கு 250 முதல் 300 அழைப்புகள் வரும். வாக்கு எண்ணும் நாளிலும், எங்களுக்கு பல புகார்கள் வந்தன.
எதிர்க்கட்சிகளின் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) உறுப்பினர்களும் ராஜ்பவன் கட்டுப்பாட்டு அறையின் உதவியை நாடியுள்ளனர். “டி.எம்.சி உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்தும் எங்களுக்கு புகார்கள் வருகின்றன. உண்மையில், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடமிருந்து சில அழைப்புகள் வந்துள்ளன” என்று சந்தீப் ராஜ்புத் கூறினார்.
எவ்வாறாயினும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தில் ஆளுநர் ஹெல்ப்லைன்களை அமைத்த நடவடிக்கையை தவறு என சுட்டிக்காட்டியுள்ளனர். "அமைதி அறை" என்பது மாநில அரசாங்கத்தின் இமேஜை இழிவுபடுத்தும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்றும், தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு ஆளுநருக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் முந்தைய வாரங்களில் வலியுறுத்தி இருந்தனர்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் பேசுகையில், “டி.எம்.சி தொண்டர்கள் கொல்லப்படுவது குறித்து ஆளுநர் கவலைப்படவில்லை. வங்காளத்திற்கு அத்தகைய அமைதி அறை தேவையில்லை. பாஜக செய்தி தொடர்பாளராக கவர்னர் செயல்பட்டு வருகிறார். சி.பி.எம், பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஐ.எஸ்.எஃப் ஆகிய கட்சிகளின் கூட்டணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அதனால்தான் அவர் தனது அரசியலமைப்பு ஆணைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் செய்கிறார். ஜக்தீப் தங்கரைப் போலவே பா.ஜ.க-வை மகிழ்விப்பதற்காக அவர் தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் செய்கிறார்." என்று கூறினார்.
பா.ஜ.க எம்.பி திலீப் கோஷ், போஸ் செயலூக்கத்துடன் இருப்பதற்காகப் பாராட்டினார், மேலும் “மாநிலத்தில் வன்முறையைத் தடுப்பதற்கான அவரது தனித்துவமான மற்றும் நல்ல முயற்சியை மக்கள் வரவேற்றுள்ளனர். மாநில அரசு அல்லது தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியதை அவர் செய்கிறார். ஆளுநர் ஒரு சிறந்த நிர்வாகி மற்றும் அவரது செயல்பாட்டால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்." என்று கூறினார்.
ஆனால், மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆளுநரின் முயற்சி பலனளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். "புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் இறுதியில் மாநில அரசு அல்லது தேர்தல் ஆணையத்தை தான் சார்ந்திருக்க வேண்டும், எனவே முயற்சிகள் பயனற்றவை." என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.