உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 1, 2024-இல் பணிகள் முடிக்கப்பட்டு கோயில் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் அறிவித்திருந்தார். அந்த வகையில் அயோத்தியில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அக்டோபருக்குள் கருவறை (கர்பக்ரிஹம்) பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு டிசம்பர் 21, 2023 முதல் ஜனவரி 14, 2024-க்குள் ராமர் சிலை நிறுவி பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கோயில் கட்டுமானப் பணிகள் குறித்து தகவல் தெரிவித்தது. அதில், உயர் பாதுகாப்பு வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து கூறியது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அங்கு 550க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிந்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2020-ம் ஆண்டு ராமர் கோயில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், கட்டுமானப் பணிகளில் முன்னேற்றம் திருப்திகரமாக உள்ளது. முதல் தளப் பணிகள் 2023 ஆம் ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முஹுரத்தின் (மங்கள நேரத்தில்) டிசம்பர் 21 மற்றும் மகர சங்கராந்திக்கு இடையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். ஜனவரி 1 அல்லது ஜனவரி 14 தேதிகளுக்குள் பணிகள் நிறைவடையும். ராமர் சிலை பிரதிஷ்டை முடிந்ததும் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்றார்.
வளாகத்தில் திட்டமிடப்பட்ட மீதமுள்ள கட்டமைப்புகளை முடிப்பதற்கான காலக்கெடு குறித்து கேட்டதற்கு, "அதைப் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
இத்தலத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஷீலா பூஜை செய்து, காவிக்கொடி ஏற்றப்பட்ட கருவறை பணிகளை முடிப்பதே முக்கிய வேலையாக உள்ளது. இந்த கொடி பக்கதர்கள் அடையாளம் காண ஏற்றப்பட்டுள்ளது. அதாவது, தற்காலிக ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் 150 மீட்டர் தூரத்தில் கருவறை பணிகள் நடைபெறுவதை அடையாளம் காணும் வகையில் கொடி அங்கு ஏற்றப்பட்டுள்ளது. கருவறை சுற்றி, கூரைக்கு அமைக்கப்படும் விட்டங்களைத் தாங்கும் வகையில் 170 தூண்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தரை தளம் தயாராகிவிடும் என்றார் ராய். ஒவ்வொரு வரிசையிலும் வெவ்வேறு கடவுள்களின் 16 சிலைகள் செதுக்கப்பட்டிருக்கும். கருவறையின் வெளிப்புறச் சுவரைச் சுற்றி - மண்டோவர் - உட்புற பரிக்கிரமா பாதையாக இருக்கும். மொத்தத்தில், கோயில் வளாகத்தில் மூன்று பரிக்கிரமா மார்க்கங்கள் இருக்கும் மற்றும் வெளிப்புறமானது 750 மீட்டர் நீளத்தில் இருக்கும். தரைத்தளத்தில் 5 மண்டபங்கள் அமைக்கப்படுகிறது.
கருவறையின் உள்ளே, ராம நவமி அன்று நண்பகலில் சூரியக் கதிர்கள் ராமர் சிலையின் நெற்றி மீது விழும் வகையில் சிலை வைக்கப்படும். இதற்கான வெற்றிகரமான சோதனை ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.