Karnataka Assembly polls 2023, Aam Aadmi Party (AAP) manifesto Tamil News: கர்நாடகாவில் மொத்தமுள்ள 244 தொகுதிக்கும் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு பரீசிலனை ஏப்ரல் 21-ம் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெற ஏப்ரல் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மே 10 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான தனது அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி நேற்று புதன்கிழமை வெளியிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அக்கட்சிக்கு வாக்களித்தால் செயல்படுத்தப்படும் 61 'தேர்தல் வாக்குறுதிகள்' பட்டியலை வெவ்வேறு தலைவர்களின் கீழ் வெளியிட்டது. அதன்படி, ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், ஒரு வீட்டுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், தனியார் பள்ளிகளை விட சிறந்ததாக அரசு பள்ளிகள் உருவாக்கப்படும், மாணவர்களுக்கு இலவச மாநகர பேருந்து போக்குவரத்து, மொஹல்லா கிளினிக்குகள், ஆண்டுக்கு 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள், ஒரு வேட்பாளருக்கு வேலை கிடைக்கும் வரை ரூ.3,000 வேலையின்மை உதவித்தொகை மற்றும் அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
40 சதவீத கமிஷன் வாங்கும் அரசு என்ற கெட்டப் பெயரை கர்நாடகா கொண்டுள்ளதால், ஊழலைக் கட்டுப்படுத்துவது குறித்த உறுதிமொழியை கட்சி நிறைவேற்றுவோம் என்றும், ஊழல் எதிர்ப்பு அமைப்பை நடத்துவதற்கு தேவையான பட்ஜெட்டை அனுமதித்து லோக்ஆயுக்தாவை வலுப்படுத்த உள்ளதாகவும் எம்.பி சஞ்சய் சிங் உறுதியளித்தார்.
'கல்விக்கான வாக்குறுதிகள்' பிரிவின் கீழ், உயர் கல்விக் கடன்களுக்கு வங்கிகளுக்கு அரசு உத்தரவாதம், தனியார் பள்ளிக் கட்டணங்களை நிர்ணயம் செய்து ஒழுங்குபடுத்துவதற்கான கட்டணக் குழுக்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலைகள் ஆகியவற்றை ஆம் ஆத்மி உறுதியளித்துள்ளது. மேலும், டெல்லியைப் போன்று 10 மாதிரி பாலிகிளினிக்குகள் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது ஆகியவை சுகாதாரத் துறையில் உள்ள உத்தரவாதங்களாக உள்ளன.
பெண்களுக்கு, இலவச நகர பேருந்து போக்குவரத்து மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பிபிஎல் பெண்ணுக்கும் 'அதிகாரமளிக்கும் கொடுப்பனவு' வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி உறுதியளித்துள்ளது. மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதாகவும், சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதாகவும், சிறு விவசாயிகளுக்கு ஒருமுறை கடன் தள்ளுபடி செய்யவும் அக்கட்சி அதன் வாக்குறுதியில் கூறியுள்ளது.
'வேலை மற்றும் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம்' கீழ், ஆம் ஆத்மி கட்சி உள்ளூர் மக்களுக்கு வேலைகளில் 80 சதவீத இடஒதுக்கீடு, அனைத்து அரசு வேலை காலியிடங்களையும் நிரப்புதல், ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்துதல் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்தல் ஆகியவற்றை உறுதி செய்துள்ளது.
கர்நாடக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிருத்வி ரெட்டி கூறுகையில், இந்த உத்தரவாதங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ 8,000 முதல் 10,000 வரை சேமிக்க உதவும். நாங்கள் உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை என்றால், வாக்காளர்கள் எங்கள் மீது வழக்குத் தொடரலாம்," என்று அவர் கூறினார்.
கட்சியின் மற்ற உத்தரவாதங்களில், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ரூ. 5,000 கோடி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, பெங்களூரில் பொதுப் போக்குவரத்தில் கவனம் செலுத்துதல் மற்றும் நகரத்தைச் சுற்றி சைக்கிள் பாதை நெட்வொர்க் ஆகியவை அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.