இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக சந்தைகளில் கால்நடைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றம் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், மத்திய அரசின் அறிவிப்பானது மனித உரிமைகளை எந்தவிதத்திலும் மீறவில்லை, அறிவிப்பை முழுமையாக படித்திருந்தால் போராட்டம் நடத்த அவசியமே இருந்திருக்காது என்றும் கூறியது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த விவாதிப்பதற்காக இன்று கேரள சட்டமன்றம் கூடியது. அப்போது, இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வது தொடர்பான மத்திய அரசின் தடைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 140 சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கேரள சட்டமன்றத்தில் ஒரே ஒரு பாஜக எம்எல்ஏ-மட்டும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு நிலையில், மற்ற ஏம்எல்ஏ-க்ள் அனைவரும் ஆதரவு அளித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமன்ற கூட்டம் கூடுவதற்கு முன்பாக கேரள சட்டமன்றத்தில் உள்ள கேண்டீனில் மாட்டுக்கறி வறுவல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கேண்டீன் சென்ற எம்எல்ஏ-க்கள் மாட்டுக்கறி வறுவலை ஒரு பிடி பிடித்துவிட்டு தான் சட்டமன்ற கூட்டத்திற்கே சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மார்க்ஸிட் கட்சியின் எம்எல்ஏ பிரதிபா ஹரி கூறும்போது: “எங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் நாங்கள் மாட்டுக்கறியை சாப்பிட்டோம். இதன் மூலம் மத்திய அரசுக்கு நாங்கள் தெரிவித்துக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நாங்கள் எந்த வகை உணவு உண்ண வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை” என்று கூறினார்.
கேரள சட்டமன்ற கேண்டீனில் வழக்கமாக மாட்டுக்கறி வறுவலானது 11 மணிக்கு மேல் தான் கிடைக்குமாம். ஆனால், இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தையொட்டி காலை முதலே மாட்டுக்கறி பரிமாறப்பட்டதாம்.
இது குறித்து கேண்டீனில் பணியுரியும் ஊழியர் ஒருவர் கூறியதாவது: “மாட்டுக்கறி விவகாரம் குறித்து இந்த சட்டமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது என்பதால், நாங்கள் 10 கிலோ மாட்டிறைச்சியை காலையிலேயே வாங்கி வந்து சமைத்தோம். அதன்படி, சட்டமன்ற கூட்டம் கூடும் முன்பாக எம்எல்ஏ-க்கள் பலரும் கேண்டீன் வந்து மாட்டுக்கறி வறுவல் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்” என்று கூறினார்.