2014 ல் அரசியல் கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, சிபிஐ (எம்) கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரின் மரணத்திற்கு, அக்கட்சித் தலைவர்கள் புகழ்வணக்கம் செலுத்தினர்.
கண்ணூர் மாவட்டத்தின் சிபிஐ (எம்) பனூர் பகுதிக் குழு உறுப்பினர் பி கே குஞ்சநந்தன் (72) வியாழக்கிழமை இரவு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடல் தொற்று காரணமாக இறந்தார். சில நாட்களுக்கு முன்னதாக, உடல் நலக் குறைபாடு காரணமாக ஜாமீனில் வெளிவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2012 ல் கோழிக்கோடு மாவட்டத்தில் சிபிஐ (எம்) கிளர்ச்சியாளர் டி.பி சந்திரசேகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குஞ்சநந்தன் மற்றும் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கட்சியின் இதர தலைவர்கள் குஞ்சநந்தனின் மரணத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தினர். “தன்னலமின்றி கட்சியை நேசித்தவர், சமூகத்தின் மீது அக்கறையை வெளிப்படுத்திய ஒரு தோழர், சமூக சேவகர் என்ற முறையில், பானூரின் அனைத்து தரப்பு மக்களின் ஒப்புதலையும் அன்பையும் அவர் வென்றிருந்தார் ” என்று விஜயன் தனது புகழ் வணக்கத்தில் தெரிவித்தார்.
சிபிஐ (எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசு 2016 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், குஞ்சநந்தனுக்கு அடிக்கடி பரோல் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட, அவருக்கு 400 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. மறைந்த சந்திரசேகரனின் துணைவியார் கே.கே ராமா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்ததை அடுத்து உயர் நீதிமன்றமும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி, குஞ்சநந்தனுக்கு மூன்று மாதங்கள் சிகிச்சைக்காக உயர் நீதிமன்றம் ஜாமீன் அனுமதித்தது.
பனூரில், ஏராளமான சிபிஐ (எம்) தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த குஞ்சநந்தனுக்கு வணக்கம் செலுத்தும் விதமாக கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற 11 பேரும் சிறையில் சிறப்பு சலுகை அனுபவித்ததாக புகார் கூறப்படுகிறது.
பரோல் நாட்களில், குஞ்சநந்தன் கட்சி நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டார். கொலை வழக்கில் தண்டனை பெற்ற போதிலும், சிபிஐ (எம்) பகுதி குழுவுக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook