கேரளாவில் 151.03 ஏக்கர் நிலம் தொடர்பாக அம்மாநில முன்னாள் காவல் துறை டி.ஜி.பி.யின் மனைவி மற்றும் வனத்துறை உரிமை கொண்டாடும் வழக்கில், அந்நிலத்தைவிட்டு வெளியேறுமாறு முன்னாள் டி.ஜி.பி. மனைவிக்கு வனத்துறை அனுப்பிய நோட்டீஸ் உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
கேரள முன்னாள் காவல் துறை டி.ஜி.பி. ஜேக்கப் தாமஸின் மனைவி, டெய்ஸி ஜேக்கப். இவர் குறிப்பிட்ட 151.03 ஏக்கர் நிலத்தை 1990-ஆம் ஆண்டு வாங்கினார். ஆனால், அந்த நிலம் மடிக்கேரி எனும் வனப்பகுதிக்கு சொந்தம் என வனத்துறை தரப்பு தெரிவிக்கிறது. இதனால், அந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடுவதை நிறுத்துமாறு கேரள வனத்துறை வலியுறுத்தியது.
இதுசம்பந்தமாக, கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி வனத்துறை துணை முதன்மை பாதுகாப்பாளர் முன்பு டெய்ஸி ஜேக்கப் ஆஜரானார். அப்போது, அவர் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக, வனத்துறை குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, குடகு வனத்துறை முதன்மை பாதுகாப்பாளர் முன்பு டெய்ஸி ஜேக்கப் ஆஜரானார். அப்போது, கடந்த 2016-ஆம் ஆண்டு வனத்துறை துணை முதன்மை பாதுகாப்பாளர் அளித்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. மேலும், கடந்த ஜூலை 7-ஆம் தேதி அந்நிலத்தைவிட்டு ஒரு மாதத்தில் வெளியேற வேண்டும் எனவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரச்சனைக்குரிய நிலம் பதிகாத் வனப்பகுதிக்கு சொந்தம் என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதனை நிரூபிக்க ஆவணங்கள் இருப்பதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.